கோலாட்டம், தப்பாட்டம்... களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் திருவிழா! களத்தில் ஓ.பி.எஸ். மகன்!!
திருச்சி: தப்பாட்ட கலைஞர்கள் மேளம் இசைக்க... மஞ்சள் பட்டுடுத்தி ஒயிலாட்ட கலைஞர்கள் முன்னாள் ஆடிவர ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஓ.பி.எஸ் தலைமையிலான அணி பிரசாரத்தில் முன்னணி வகிக்கும். ஆனால் அவர் தற்போது தமிழக முதல்வராக உள்ளதால் அவரது மகன் பம்பரமாக சுற்றி வேலை பார்ப்பதாக கூறி அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
பிப்ரவரி 13-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் பார்வையாளர் பால்கார்சிங் முன்னிலையில் நடந்தது. ஒரே சின்னங்களை கேட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
டிராபிக் ராமசாமிக்கு பேனா முனை
சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 7 கதிர்கள் கொண்ட பேனா முனையை சின்னமாக கேட்டிருந்தார். அதே சின்னத்தை மேலும் இருவர் கேட்டதால் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. அதில் டிராபிக் ராமசாமிக்கே அந்த சின்னம் கிடைத்தது.
களைகட்டும் பிரசாரம்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களத்தில் 29 பேர் போட்டியில் உள்ளனர். இதனால் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக, கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் நேற்று தங்கள் பிரசாரத்தை தொடங்கினர். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுயேட்சைகளும் பிராசரத்தில் ஈடுபட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.
அமைச்சர்கள் ஓட்டு வேட்டை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் தொகுதி முழுவதும் குவிந்துள்ளனர்.
தினசரி கவனிப்பு
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளைக் கொண்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களை தேர்தல் பணிக்குழுவில் உள்ளவர்கள் தினமும் சந்தித்து அ.தி.மு.க.விற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முதல்வரின் மகன்
தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத், திருவானைக்காவல் பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். இவர் தினமும் வாக்காளர்களை சந்திப்பது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பது என சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவினர் உற்சாகம்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்திற்கு வராத நிலையில் அவரது மகன் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது எங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது என திருவானைக்காவல் பகுதி அ.தி.மு.க. தொண்டர்கள் கூறினர்.
இப்பவே வெற்றிதான்
பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ஒருவர், மக்களிடம் நாங்கள் ஓட்டு கேட்டு போகாமலேயே எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெரும் என்று உற்சாகத்துடன் கூறிவருகிறார்.
பிரசாரத்தில் குழந்தைகள்
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரசாரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பழனிச்சாமி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கு பணம், உணவுப்பொருட்களைக் கொடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.