ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஆனந்த் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆனந்த் இன்று தனது வேட்பு மனுவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மனோகரனிடம் தாக்கல் செய்தார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம்தேதி தொடங்கியது. அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி மனு தாக்கல் செய்தார். வளர்மதி 20ஆம் தேதியும் மீண்டும் மனுதாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளரைத் தவிர இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்த், இன்று காலை 10.30 மணிக்கு தில்லை நகரில் உள்ள திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் கே.என். நேரு தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், வெளிமாவட்ட தி.மு.க. செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி சோழன் நகரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆனந்த் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான மனோகரனிடம் காலை 11மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது வேட்பாளருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மகன் ஹபிபுர் ரகுமான் ஆகிய 4 பேர் சென்றனர்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர் ஆனந்துடன் கே. என்.நேரு, தேர்தல் பணிக்குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு வந்தனர். அங்கு வேட்பாளர் ஆனந்த் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
ஸ்டாலின் வருகை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணிகளை விரைவு படுத்தும் வகையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு திருச்சி வருகிறார். வருகிற 24ஆம்தேதி காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க பவனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணி குறித்து பேசுகிறார். தொடர்ந்து 25ஆம்தேதி முதல் மு.க.ஸ்டாலின் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் தொகுதியில் தங்கியிருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை. ஸ்ரீரங்கத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுவதால் இடைத்தேர்தல்கள் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.