"மக்களின் முதல்வர்" ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர்.!
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எஸ்.எஸ்.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரது இடத்தை வேறு யாராலும் இனி நிரப்பவே முடியாது. திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சட்டசபை உறுப்பினராக, மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் எஸ்.எஸ்.ஆர்.
தெளிவான வசன உச்சரிப்போடு சிறந்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர். தனது தலைமுறை நடிகர்கள் மட்டுமல்லாமல், இந்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால் இதே ஜெயலலிதாவால் ஒருமுறை அதிமுகவை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.ஆரை அதிமுகவை விட்டு நீக்கியபோது கட்சியின் முன்னோடி தலைவர்களே அதிர்ச்சி அடைந்தனர். காரணம், எம்.ஜி.ஆருக்கு முன்பே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர்.
எப்படி திமுகவுக்காக தனது கடும் உழைப்பைக் கொடுத்தாரோ அதேபோல அதிமுகவிலும் தீவிரமாக செயல்பட்டவர் எஸ்.எஸ்.ஆர். மேலும் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவரும் கூட. அவருக்கு இந்த நிலையா என்று அனைவரும் அதிர்ந்தனர்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ஒரு செய்தியாளருக்கு பேட்டி அளித்த எஸ்.எஸ்.ஆர்., இவர் யார் என்னை நீக்க என்று கூறி கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்திருந்தது இன்னும் நமது "காதுகளை" விட்டு மறையவில்லை.