திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 59 இடங்களா? ஸ்டாலின் சொல்வது என்ன?!
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து பதிலளித்துள்ள ஸ்டாலின், ஊடகங்கள்தான் இதுபோன்று பிரச்சாரம் செய்வதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நல்லது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பெரும்பான்மையான தேமுதிக நிர்வாகிகள் விரும்பும் நிலையில், விஜயகாந்தின் மவுனம் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. 2011 சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2014 லோக்சபா தேர்தல் என தொடர் தோல்விகளைச் சந்தித்த திமுகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திமுக முயற்சி
அதிமுகவை தோற்கடிக்கும் வகையில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திமுக தொடங்கியது. எப்படியாவது தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்து காய்களை நகர்த்திவந்தது.
சிக்காத தேமுதிக
ஆனால், எவ்வளவு முயன்றும் தேமுதிகவுடன் உடன்பாட்டை எட்டமுடியவில்லை. திமுக தரப்பில் சில மூத்த தலைவர்களும், ஸ்டாலின் குடும்பத்தினரும் விஜயகாந்த் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக இருதரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகின.
பாதிக்கு பாதி
எடுத்த எடுப்பிலேயே பீகார் பாணியில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விஜயகாந்த், 100 தொகுதிகள், துணை முதல்வர், 10 அமைச்சர்கள், உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது.
திமுக அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை, 50 தொகுதிகள் தருவோம், ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிறகு கொஞ்சம் இறங்கி வந்த விஜயகாந்த் ஆட்சியில் பங்கும், குறைந்தது 70 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதையும் திமுக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாஜகவில் துண்டு
அதைத் தொடர்ந்தே பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்தித்து விஜயகாந்த் பேசியுள்ளார். இந்நிலையில் திமுகவுக்கு நெருக்கமான 2 தொழிலதிபர்கள், விஜயகாந்தை சந்தித்து பேசி சாதக பாதகங்களை எடுத்துக் கூறினார்களாம். ஆனாலும் 60 தொகுதிகளும், ஆட்சியில் பங்கு என்ற உத்தரவாதமும் அளித்தால் மட்டுமே கூட்டணி என்பதில் விஜயகாந்த் விடாப்படியாக இருந்துள்ளார்.
விடாப்பிடி விஜயகாந்த்
இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஜவடேகர், விஜயகாந்தை சந்தித்துப் பேசியது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணிப் பேச்சுவார்த்தையை இனியும் இழுத்தடிப்பது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தது.
விட்டுத்தர சம்மதம்
அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் திமுக குறைந்தது 145 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 89 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில், 55 தொகுதிகளை தேமுதிகவுக்கு விட்டுத் தர திமுக சம்மதித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தேமுதிகவிற்கு 59 இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டாதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
விஜயகாந்துக்கு காத்திருப்பு
தேர்தல் களம் படுபரபப்பாக உள்ள நிலையில் அனைவரின் பார்வையும் தேமுதிக பக்கம்தான் திரும்பியுள்ளது. தேமுதிக தங்கள் கூட்டணியில்தான் இணையும் என்று ஒரு பக்கம் பாஜகவும் மற்றொரு பக்கம் மக்கள் நலக் கூட்டணியும் கூறி வருகின்றன.
வந்தால் நல்லது.
இதுதவிர, திமுகவும் அழைப்பு விடுத்துவிட்டு வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் நல்லது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நானும் தெரிந்து கொள்கிறேன்
மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தேமுதிக - திமுக இடையேயான கூட்டணி பற்றி கேள்வி எழுப்பினர். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததுபோல் தகவல்கள் வந்துள்ளதே என்று கேட்டதற்கு தகவல் எங்கிருந்து வந்தது என்று தயவு செய்து சொல்லுங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன் என்றார்.
59 இடங்கள்
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், உங்களைப்போல ஊடகங்கள்தான் இதுபோன்று பிரச்சாரம் செய்கின்றன. அது உங்களுடைய விளம்பரத்துக்காகவும், வியாபாரத்திற்காகவும் செய்கிற யுக்தி. அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
விஜயகாந்த் வரணும்
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நல்லதா? என்று கேட்டதற்கு, அதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். வந்தால் நல்லது. அதைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
மவுனத்தால் குழப்பம்
அதே நேரத்தில் விஜயகாந்த் இதுவரை யாருக்கும் எந்த பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். இது அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் பிறக்கட்சியினரை மட்டுமல்லாது அவரது சொந்தக் கட்சி நிர்வாகிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.