‘ஆச்சி’மனோரமாவின் மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு: ஸ்டாலின்
திருப்பூர்: நடிகை மனோரமாவின் மரணம் திரையுலகத்திற்கு பேரிழப்பு என திமுக பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் நடிகை மனோரமா. அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா, நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.
சென்னை தி.நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் இருப்பதால் திமுக பொருளாளர் ஸ்டாலினால் மனோரமாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த இயலவில்லை.
ஆனபோதும் திருப்பூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்படும் மனோரமாவின் இறப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா.
அவர் ஏற்ற வேடங்களிலேயே என்னைக் கவர்ந்தது தில்லாணா மோகனாம்பாள் படத்தில் வரும் ஜில் ஜில் ரமாமணி கேரக்டர்தான்.
தலைவர் கருணாநிதியின் உதயசூரியன் நாடகத்தில் அவர் வசனம் பேசி நடித்த காட்சி இன்றளவும் அனைவராலும் புகழப்படுகிறது.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடு்ம்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.