சென்னை வெள்ளம்.. “இலைச் சோற்றில் இமயமலையை மறைக்கிறார் ஜெ”... ஸ்டாலின் தாக்கு
பெரம்பலூர்: செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தி 347 பேரைக் கொன்று விட்டு, "இலைச் சோற்றில் இமயமலையை மறைப்பது போல" இப்போது உண்மையை மறைக்க ஜெயலலிதா பொய்களை பேசி வருகிறார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
அப்போது அவர் பேசியதாவது:-
தோல்வி பயம்...
நேற்று காஞ்சிபுரத்தில் பேசிய ஜெயலலிதா அவர்கள் 2 நாள் கழித்து தோல்வி பயத்தில் நேற்று வாய் திறந்து பேசி ஒன்றை உளறி இருக்கிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்று பேசிய ஜெயலலிதா, நான் தான் எல்லாம், என்னால் தான் மக்கள், மக்களால் நான், மக்களுக்காக நான் என எங்கு பார்த்தாலும் அகங்காரத்துடன் பேசுகிறார். ஆனால் தலைவர் கலைஞர் நான் என்பதை எப்போதுமே பேசுவதில்லை. நாம் என்று பேசினால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்பார்.
சென்னை வெள்ளம்...
நேற்று காஞ்சிபுரத்தில் விஷத்தை கக்கி இருக்கிறார் ஜெயலலிதா. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்து விட்டு தண்ணீரை மொத்தமாக வெளியேற்றியது ஏன் என்பது தலைவர் கலைஞரின் கேள்வி. அதோடு திமுகவினரின் கேள்வியும், மக்களின் கேள்வியும் கூட அதுதான். அப்போதெல்லாம் வாய் திறக்காத ஜெயலலிதா இப்போது திமுக இளைஞரணி, மகளிரணி மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றிய உண்மைகளை சொல்லத் தொடங்கியதும், ஜெயலலிதா இப்போது ஒரு பொய்யை கூறி இருக்கிறார். திடீரென ஏரியை திறந்து விடவில்லை என்று சொல்கிறார்.
மடை திறந்த வெள்ளமாக பொய்...
செயற்கை பேரிடரை ஏற்படுத்தி 347 பேரை கொன்று விட்டு இப்போது உண்மையை இலைச் சோற்றில் இமயமலையை மறைப்பது போல பொய் பேசியிருக்கிறார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மடை திறந்த வெள்ளம் போல பொய்களை அள்ளி வீசி வருகிறார்.
பொய் மூட்டைகள்...
2015 நவம்பர் 9-ம் தேதி அன்று ஏற்பட்ட செயற்கை வெள்ளத்தால் கடலூர், சென்னை ஆகிய பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அங்கு சென்று ஆறுதல் சொன்னாரா ? நவம்பர் 14 -ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அதிக மழை பெய்யும் நேரங்களில் இதுபோன்ற சேதங்களை தவிர்க்க முடியாது என்று மனசாட்சியே இல்லாமல் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பாகவே சென்னையில் கன மழை பெய்யும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்தது. அதேபோல வானிலை ஆய்வு மையமும் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 347 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த ஜெயலலிதா இப்போது காஞ்சிபுரத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஆர்.கே.நகர்...
மழை பெய்த பிறகு ஆர்.கே. நகர் பகுதிக்கு கூட ஜெயலலிதா வராத நிலையில் எதிர்கட்சி வரிசையில் உள்ள நான் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அதன்பிறகு வேனில் ஆர்.கே. நகர் பகுதிக்கு வந்த ஜெயலலிதா வேனை விட்டு இறங்காமல், கண்ணாடியை கூட திறக்காமல், வாக்காள பெருமக்களே என்று பேசி விட்டு சென்றார்.
சொல்லாததையும் செய்துள்ளார்...
தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதையெல்லாம் தான் செய்து விட்டதாகவும், சொல்லாத பலவற்றை செய்துள்ளதாகவும் சொல்கிறார். உண்மைதான். ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடை திறப்பேன் என்று சொல்லாததை செய்திருக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறப்பேன் என்று சொல்லவில்லை ஆனால் செய்திருக்கிறார். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அதன் பொறியாளர்களுக்கே அதிகாரம் உள்ளதென அறிக்கை விட்டு தான் தப்பிக்க நினைக்கிறார் ஜெயலலிதா.
காலதாமதம் ஏன்..?
டிசம்பர் 1-ம் தேதி வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மூலமாக டிசம்பர் -12 அன்று அறிக்கை விட்டார். எதற்காக இந்த இடைவெளி ? அவர் செய்திருக்கக் கூடிய தவறுகளை மூடி மறைக்கவே இந்த காலதாமதம் நடந்தது என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.
கொடநாட்டு ராணிக்கு சவால்...
குன்னம் மண்ணில் நின்று கொண்டு உங்களை எல்லாம் சாட்சியாக வைத்துக் கொண்டு கொட நாட்டு ராணி ஜெயலலிதாவிற்கு சவால் விடுகிறேன். அவர் ஏற்றுக் கொள்ளத் தயாரா ? அவருக்கு தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் முறையான விசாரணை நடத்த தயாரா ? நாங்கள் ரெடி, நீங்க ரெடியா ? நான் சொல்வதற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். புள்ளி விவரங்களுடன்தான் வருகிறேன். ஆதாரமில்லாமல் நான் பேச மாட்டேன். காரணம் நான் கலைஞரின் மகன். என் மீது வழக்கு போட்டாலும் சந்திக்க தயார். விசாரணைக்கு ஜெயலலிதா தயாரா ? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. நீங்கள் சிபிஐ விசாரணைக்கு தயாரா ?" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.