மனித தெய்வமாக விளங்கும் மதர் தெரசா.. மு.க.ஸ்டாலின் புகழாரம் #motherteresa #vaticancity
சென்னை: மனித தெய்வமாக விளங்கும் மதர் தெரசா என்று திமுக தலைவர் கருணாநிதியால் போற்றப்பட்டவர் அன்னை தெரசா. அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கவது பெருமையும், மகிழ்ச்சியும் தருகிறது என்று திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் பொது சேவைக்கு ஈடு இணை இதுவரை இல்லை என்ற அளவிற்கு உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர். அவரது அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்யவிருக்கிறார் போப் ஆண்டவர். மனமகிழ்ச்சியளிக்கும் இந்த விழாவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து தலைவர்கள் எல்லாம் பங்கேற்று அன்னை தெரசாவிற்கு பெருமை சேர்க்கிறார்கள்.
1962-ஆம் ஆண்டே பத்மஸ்ரீ விருது பெற்ற அன்னை தெரசாவிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். ஏழைகளை இதயத்தில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஓயாது உழைத்தவர் அன்னை தெரசா. கருணை வடிவாகத் திகழ்ந்த அவர் தன் வாழ்க்கையையே தொண்டாக்கிக் கொண்டவர். ஏழைகள், நோயாளிகள், எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்கள் என்று எல்லாரையுமே தன் பிள்ளைகள் போல் பாவித்து மனித நேய சேவையாற்றிய அவரை தலைவர் கலைஞர் ஒரு முறை "மனித தெய்வமாக விளங்கும் மதர் தெரசா" என்றே புகழாரம் சூட்டி பெருமிதப்பட்டார் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் 4.12.2010 அன்று அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடியது தலைவர் கலைஞர் தலைமயிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. ஆதரவற்ற மகளிருக்கு திருமண உதவித் திட்டத்திற்கு "அன்னை தெரசா" பெயர் சூட்டியும் மகிழ்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்திட 15.30 கோடி ரூபாயில் "வணிக வளாகம்" அமைத்து, அந்த பிரமாண்டமான கட்டிடத்தை 1.11.2010 அன்று திறந்து வைத்த முதலமைச்சர் கலைஞர் அக்கட்டடத்திற்கு "அன்னை தெரசா மகளிர் வணிக வளாகம்" என்று பெயர் சூட்டி "அன்னை தெரசாவின்" சேவையை போற்றிப் பாராட்டினார்.
அகராதியில் "மனித நேயத்திற்கு" உண்மையான அர்த்தம் "மதர் தெரசா" என்று உலகமே போற்றும் அவருக்கு ரோம் நகரில் "புனிதர் பட்டம்" வழங்கி கவுரவிப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏழைகளை, பாட்டாளிகளை, தொழு நோயாளிகளை, எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற மகத்தான மனித நேயம் கொண்ட அன்னை தெரசா இதயத்தில் "ஈவு இரக்கம்" மட்டுமே இறுதி வரை குடியிருந்தது. அடித்தட்டு மக்கள் "பாசத்தை" மட்டுமல்ல, "அன்பையும்" அன்னை தெரசாவின் முகத்தில் கண்டார்கள். அந்த மனித தெய்வத்திற்கு வழங்கப்படும் இந்த புனிதர் பட்டம் என்ற கவுரவம் உலக அரங்கில் மனித நேயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அன்னையின் நினைவைப் போற்றும் இந்த அரிய தினத்தில் பொதுத் தொண்டாற்றுவோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.