விடமாட்டோம்.. கூவத்தூர் பேர வீடியோ விவகாரத்தை மீண்டும் எழுப்புவோம்: ஸ்டாலின் பேட்டி
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. சரவணனின் கூவத்தூர் பேர வீடியோ விவகாரத்தை சட்டசபையில் மீண்டும் கிளப்புவோம் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்கள் பணம் வாங்கியதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.
தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஸ்டாலின் உள்பட திமுக எம்எ.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து சட்டசபை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். கைதான எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராயபுரம் தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: மீண்டும் சட்டசபைக்கு இன்று செல்வோம். கூவத்தூர் பேர விவகாரம் குறித்து மீண்டும் எழுப்புவோம். அரசு அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உரிமையோடு கோருவோம். விளக்கம் கேட்டு சட்டசபையில் குரல் கொடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.