கரை வேஷ்டி கட்டி பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்டாலின்
சென்னை: ரோட்டு கடையில் டீ குடிக்கிறார்... சாலையோர கடையில் தோசை சாப்பிடுகிறார்... பஸ்சில் போகிறார்... செல்ஃபி எடுக்கிறார்... டிராக்டர் ஓட்டுகிறார், சிலம்பம் சுற்றுகிறார்... வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு விவசாயி போல நாத்து நடுகிறார் மு.க. ஸ்டாலின்.
இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று வளைத்து வளைத்து கமெண்ட் போட்டாலும் அதுக்கெல்லாம் ‘டோண்ட் கேர்' என்று கூறி விட்டு நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் உற்சாக ஸ்டாலினாக வலம் வருகிறார்.
கரைவேஷ்டிக்காரர்களை ஒதுக்கிவிட்டு மக்களோடு மக்களாக பழகினாலும், போகும் இடமெங்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சில் சற்று பிரச்சார நெடி இருக்கத்தான் செய்கிறது. அதிமுக ஆட்சி முடியட்டும், 2016ல் திமுக ஆட்சி விடியட்டும் என்று ஸ்டாலின் கூறினாலும், 1996-2001, 2006-2011 என இன்றைய தலைமுறையினர் திமுக ஆட்சியைப் பார்த்தவர்கள்தான்.

ஆடையில் மாற்றம்
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என்ற பிம்பத்தை மாற்ற கலர் சட்டை, பேண்ட் என யூத் லுக்கில் கலக்கலாக களமிறங்கினார் ஸ்டாலின். நடந்த பயணம் செய்து மக்களை சந்தித்த போதும் சரி, வாகனத்தில் பயணித்த போதும் சரி, மரத்தடியில் அமர்ந்து மக்களிடம் கிராமத்து பாணியில் பஞ்சாயத்து பேசிய போதும் சரி அந்த அரசியல் பேச்சு மட்டும் மாறவில்லை.

குறை கேட்க வந்திருக்கேன்
இந்த ஆட்சியில மின்வெட்டு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், என எல்லா பிரச்சினையும் இருக்கிறது என்று மக்கள் சொல்லும் போது ஆட்சியை மாற்றுங்கள் திமுக வந்தால் இந்த குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று கூறுகிறார் ஸ்டாலின்.

ஒருமணிநேர முதல்வர்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒருமணிநேர முதல்வர், அரைமணி நேர முதல்வர் என்று போட்டுத்தாக்கும் ஸ்டாலின், அமைச்சர்களையும் விடுவதில்லை. மின்சாரத்துறை அமைச்சர் சட்டசபையில், 'வானத்தில் வேண்டுமானால் பவர் கட்டாகும்; பூமியில் கட்டாகாது' என கூறுகிறார். இவர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்ட முடியும். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது என்று ஆட்சியைப் பற்றி குறை கூறவும் தவறுவதில்லை.

ஜெயலலிதாவிற்கு நன்றி
ஸ்டாலின் போகுமிடங்களில் எல்லாம் அதிமுகவினர் பேனர் வைக்கத் தவறுவதில்லை. அதைப் பற்றியும் பேசி அப்ளாஸ் அள்ளுகிறார் ஸ்டாலின். அம்மா என்னை வரவேற்கிறாங்க, பாருங்க. எனவே, தோழர்களை அன்போடு கேட்டுக்கிறேன், இனி எனக்கு தி.மு.க.வினர் பேனர் வைக்க வேண்டாம். அ.தி.மு.க.வினரே பேனர் வைத்துவிடுவார்கள். முதல்வர் எவ்வளவு சிரித்த முகத்துடன் வரவேற்கிறாங்க பாருங்க. எதற்கு நமக்கு செலவு. இங்கு பேனர் வைத்துள்ள மாவட்டச் செயலாளர் முதல், கிளைச் செயலாளார் வரை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கின்றேன்.

அன்புமணிக்கு அட்டாக்
தி.மு.கவை தீண்டத்தகாத கட்சியாக நினைத்தவர்கள் தற்போது அரண்டு கிடக்கின்றனர். ஊழல், ஊழல் என கூறியவர்கள் எல்லாம் இன்று ஊதாரித்தனமாக சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதிரி, உதிரி கட்சிகளுக்கு ஆத்திரம் வந்தாலும் அர்த்தம் இருக்கு என்று பாமக, வி.சி. மதிமுக என அனைத்து கட்சிகளையும் அட்டாக் செய்கிறார் ஸ்டாலின்.

விவசாயி… விவசாயி
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்த ஸ்டாலின், டிராக்டரில் ஏறி லாவகமாக ஓட்டினார். இதுநாள் வரை கலர் சட்டை, பேண்ட் அணிந்து வலம் வந்த ஸ்டாலின் இன்று பழைய பன்னீர் செல்வமாக வெள்ளை சட்டை, வேஷ்டிக்கு மாறியது கூடுதல் சுவாரஸ்யம்.

வேஷ்டிய மடித்து கட்டு
தலையில் துண்டை கட்டிக்கொண்டு வேஷ்டியை மடித்துக் கட்டி, விளைநிலத்தில் இறங்கிய ஸ்டாலினை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தனர் விவசாயிகள். நாத்து எப்படி நடவேண்டும் என்று ஸ்டாலினின் கிரியேட்டிவ் டீம் திட்டமிடவில்லையோ என்னவோ?

மாத்தி பேசுங்க தளபதி
சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி ஓட்டு போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைக்கு சினிமா நடிகர்களை வம்பிழுக்கின்றனர் வலைஞர்கள். அதேபோல அரசியல்வாதிகளும் வலைஞர்களின் கமெண்டுகளுக்கு தப்புவதில்லை. ரோட்டோர கடையில் டீ குடிப்பதினாலோ, டிராக்டர் ஓட்டுவதினாலே மக்களின் ஓட்டுகள் மாறி விழும் என்று நம்ப முடியாது. ஆட்சிக்கு வந்தால் இனி தவறுகள் நடக்காது என்று கூறினாலும், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறினாலும் மது ஆலைகளை நடத்தும் திமுகவினர் ஆலைகளை மூடுவார்கள் என்று ஸ்டாலின் மாத்தி பேசினால் அதற்கு அப்ளாஸ் அள்ளுமே!

ஊழல்வாதிகளுக்கு சீட் இல்லை
நடப்பது ஊழல் ஆட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கரப்சன், கலெக்சன், கமிஷன் இல்லாத ஆட்சியை தருவோம் என்று ஸ்டாலின் கூறுவது சரிதான் ஆனால் ஊழல் செய்தவர்களுக்கு, சொத்துக்களை குவித்தவர்களுக்கு 2016 சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்க மாட்டோம் என்று போகும் இடமெங்கும் ஸ்டாலின் அறிவித்தால் அதுவே மாற்றம்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தளபதி மாத்தி பேச யோசிப்பாரா?












Click it and Unblock the Notifications