ஜெ.,வும், கருணாநிதி மட்டுமல்ல... பிரபுதேவாவும் இவர்கிட்டதான் முத்திரைத்தாள் வாங்குவாராம்
சென்னை: அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் சென்டிமெண்ட் விசயத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் என்று அடிக்கடி நிரூபிக்கின்றனர். முகூர்த்தநாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ததில் தொடங்கி வேட்புமனுக்கான முத்திரைத்தாள் வாங்கியது வரை இருவரின் ஒற்றுமை தற்போது தெரியவந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் இணைத்துள்ள முத்திரைதாள் மயிலாப்பூரில் ஒரே முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் தான் வாங்கியுள்ளனர். இவர் அரசியல் பிரபலங்களுக்கு மட்டுமல்ல சினிமா பிரபலங்களுக்கும் முத்திரைத்தாள் விற்பனை செய்து வருகிறாராம். எல்லாம் கைராசிதான் என்கிறார் ரவூப்பாஷா.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும் உறுதி மொழி பத்திரம், முத்திரைதாளில் டைப் அடித்து கையொப்பமிட்டு வழங்கப்படும். இதற்கு முத்திரைத்தாள் எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மயிலாப்பூரில் உள்ள விற்பனைத்தாள் விற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற வெண்டர் ரவூப்பாஷா என்பவரிடம் வாங்கியிருக்கின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இந்த முத்திரை தாளை ஜெயலலிதா பெற்றுள்ளார். இதன் பத்திர எண்- 6904. கருணாநிதி ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, அதாவது மார்ச் 24ம் தேதி பெற்றுள்ளார். பத்திர எண்: 6897.
மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ரவூப்பாஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரைத்தாள்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பத்திரங்களை வாங்கிச் சென்றதாக கூறும் ரவூப் பாஷா, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிமுகவினர் வந்து முதல்வர் ஜெயலலிதாவிற்காக முத்திரைத்தாள்களை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

போயஸ்கார்டன் மற்றும் கோபாலபுரத்திற்கு அருகே மயிலாப்பூர் இருப்பதால் தன்னிடம் முத்திரைதாள் வாங்கியுள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல பிரபல சினிமா நட்சத்திரங்களும் இவரிடம்தான் முத்திரைத்தாள்களை வாங்குவார்களாம். நடிகர் பிரபுதேவா இவரிடம் முத்திரைத்தாள்களை வாங்கியுள்ளாராம். எல்லாம் சென்டிமெண்ட்தான் என்கிறார்.
பிரபலங்கள் பெரும்பாலும் இரவு 11மணிக்கு மேல்தான் முத்திரைத்தாள்களை வாங்க வருவதாக கூறும் ராவூப் பாஷா, தனக்கு இந்த சென்டிமெண்ட் மீது எல்லாம் நம்பிக்கையில்லை, நான் வழக்கம் போல என்னுடைய பிசினசை செய்கிறேன் என்கிறார்.












Click it and Unblock the Notifications