மீனவர்கள் விடுதலை: மார்ச் 25ல் கொழும்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் அனைவரும் விடு தலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மார்ச் 25ம் தேதி கொழும்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழகம் இசைவு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசின் இடைவிடாத முயற்சியால் 177 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களின் 44 படகுகளும் கிடைத்துவிட்டன. இலங்கை சிறையில் இருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 25ம் தேதி நடக்கவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச்செயலாளர் சுசித்ரா துரைக்கு தமிழக மீன்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிந்து பிரதமருக்கு 20.9.13 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி கடந்த 2-ந் தேதி உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நினைப்பூட்டுகிறேன். முதல்வர் கடிதம் எழுதிய பிறகு சென்னையில் ஜனவரி 27-ந் தேதி இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மார்ச் 13-ந் தேதியன்று கொழும்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று குறிப்பிட்டு உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
மேலும், இலங்கையில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவித்தால்தான், அந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தேன். பின்னர், தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பது தொடர்பான எந்த தகவலையும் தமிழக அரசு இதுவரை பெறவில்லை என்று 11-ந் தேதி குறிப்பிட்டேன்.
பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்றால், கைதாகியுள்ள அனைத்து தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் அதற்கு முன்பு விடுவிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
தமிழக முதல்வரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 12-ந் தேதி பிற்பகலில் 116 தமிழக மீனவர்களையும், அவர்களின் 26 படகுகளையும் இலங்கை அதிகாரிகள் விடுவித்தனர். மீதம் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்படாமல் இருந்ததால், திட்டமிட்டபடி 13-ந் தேதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் போய்விட்டது.
முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் அவர்களின் படகுகளும், இலங்கை கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், இங்கு ஜெயிலில் அடைத்து வைத்திருந்த 39 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவித்துவிட்டது.
இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே 25-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கிறதென்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததாக, 13-ந் தேதி எழுதிய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். மாற்றப்பட்டுள்ளபடி 25-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இலங்கை அரசுக்கு நீங்கள் தகவல் அளியுங்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.