ஐயா எங்களை தெரியுதாயா?.. மணிகண்டன் சாரும், சோமு சாரும், சார்.. நீங்க எப்படி? நெகிழ்ச்சி சம்பவம்!
ஆசிரியர் குரல் கேட்டு உயிர் பிழைத்திருக்கிறான் ஒரு மாணவன்
Recommended Video

புதுக்கோட்டை: "ம்ஹும்... பிழைப்பது கஷ்டம்.. வேணும்னா இந்த பையனை வீட்டிக்கு தூக்கிட்டு போயிடுங்க"-என்று மாணவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களே கைவிரித்துவிட.. சற்றுநேரத்தில் ஆசிரியர்களின் குரல் கேட்டே அம்மாணவன் உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை பள்ளி முடிந்ததும் அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தான். இதையடுத்து, அருண் பாண்டியனை அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது நாடித்துடிப்பு மிகவும் குறைந்து இருந்தது. அதனால் டாக்டர்கள், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுங்கள்" என்றனர்.
இதற்குள் அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளித்துவிட்டு, ஆம்புலன்சில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் பறந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கொண்டு போய் அனுமதித்தவுடன், மாணவனை பார்த்து மருத்துவர்கள் சொன்ன முதல் வார்த்தை, "நாடித்துடிப்பு ரொம்ப குறைஞ்சுபோச்சு, ஆக்சிஜனை எடுத்தால் எதுவும் நடக்கலாம், பிழைப்பது கஷ்டம்.. வேணும்னா இந்த பையனை வீட்டிக்கு தூக்கிட்டு போயிடுங்க" என்று சொல்லிவிட சக மாணவர்கள் அழ தொடங்கிவிட்டனர். அதற்குள் பெற்றோரும் வந்துவிட அவர்களும் அதை கேட்டு கதறி துடித்தனர்.

பிழைப்பது கஷ்டம்தான்..
இந்த நேரத்தில் அம்மாணவன் படிக்கும் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் என்பவர்கள் கையில் காயம் ஏற்பட்டதால் கட்டு போடலாம் என்று நினைத்து, கந்தர்வக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள், "இப்போதான் உங்க ஸ்கூல் பையனுக்கு ரொம்ப முடியாம போயி, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்" என்று சொன்னர். இதனைக் கேட்டதும், காயத்துக்கு கட்டு போட வந்த ஆசிரியர்கள், அதைக்கூட கவனிக்காமல், உடனடியாக தஞ்சாவூருக்கு விரைந்தனர். சிகிச்சை பெறும் பிரிவுக்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது மாணவன் அருண்பாண்டியன் என்பதும், உயிருக்கு போராடி கொண்டும், கை, கால்கள் அசைவின்றி கிடந்ததும். அங்கிருந்த மருத்துவர்களும் ஆசிரியர்களிடம், "பிழைப்பது கஷ்டம்தான்" என்றனர். இதைகேட்ட ஆசிரியர்கள் கண்கலங்கினர்.

எங்களை உனக்கு தெரியுதா?
பின்னர் மாணவனின் காதருகே சென்ற ஆசிரியர் மணிகண்டன்.. "தம்பி கண் திறந்து பார்யா... யார் வந்திருக்கிறது-ன்னு" என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க தொடங்கினார். அதுவரை கோமாவில் அசைவற்று கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருள தொடங்கியது. தொடர்ந்து இரு ஆசிரியர்களும் அவன் காதருகே சென்று, "உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே இருந்தனர். இப்போது கை, கால்கள் அசைக்க தொடங்கினான் மாணவன். இப்படியே 7 நிமிடங்கள் கடந்தன. கண்களை திறந்து சுயநினைவு பெற்ற மாணவன் ஆசிரியர்களை பார்த்து, "சார்.. நீங்க எப்ப வந்தீங்க?" என்றான். ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த ஆசிரியர்கள் மாணவனிடம், "எங்களை உனக்கு தெரியுதாயா? என்று கேட்டனர். "மணிகண்டன் சாரும், சோமு சாரும், சார்... நீங்க எப்படி வந்தீங்க? " என்று தெளிவாக கேட்டான் மாணவன்.

ஆனந்த கண்ணீரில் ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் பேச பேச, மாணவனின் உணர்வுகள் தூண்டப்பட்டு சுயநினைவு முழுவதுமாக திரும்பியிருந்தது. இப்போது சுற்றியிருந்த மருத்துவர்கள், நர்ஸ்கள், பெற்றோர், சக மாணவர்கள் என எல்லோருக்குமே வியப்பில் கண்களில் ஆனந்தகண்ணீர் வழிந்தது. அதுவரை புரண்டுபுரண்டு அழுதுகொண்டிருந்த பெற்றோர், ஆசிரியர்களின் கைகளை பற்றிக்கொண்டு நன்றிகளை கண்ணீரால் நனைத்தனர். அதற்குள் தகவலறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியரும் வந்து மாணவனை பார்த்தார். பிறகு மாணவன், "சார்.. நான் நல்லா இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க சார்" என்றான். மாணவன் குணமடைந்தும், தெளிவடைந்தும் விட்டதை கண்ட ஆசிரியர்கள், கை செலவுக்குகூட பணமின்றி அரக்க பரக்க பதறியடித்து ஓடிவந்த பெற்றோரிடம் சிறு தொகை ஒன்றினை கொடுத்துவிட்டு வெளியே வகை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம் அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்துவிட்டு ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து மாணவனை பார்த்தார்.

பசங்க படம்
சில வருடங்களுக்கு இதே புதுக்கோட்டை மாவட்டத்தை தழுவி எடுக்கப்பட்டு வெளிவந்த படம் 'பசங்க'. அதிலும் இதுபோன்றதொரு சம்பவம்தான் காட்சியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும். அந்த குழந்தையை சிறு வயது முதல் கைதட்டி உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்தும் யுக்தியை பெற்றோர் கையாள்வர். ஒரு விபத்தில் அவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது இதே போல கைதட்டியே அனைவரும் சேர்ந்து அவனை உயிர்ப்பிப்பார்கள். இந்த காட்சியானது தற்போது நிஜமாகவே நடந்துள்ளது அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளது.

கட்டிப்பிடி வைத்தியம்
இந்த சம்பவம் மூலம் நமக்கு 2 விஷயங்கள் புலப்படுகிறது. முதலாவதாக, பெற்ற தாய் தந்தைக்கு பிறகு மாணவர்கள் ஆசிரியர்களை எந்த அளவில் மனதில் வரித்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், வெறும் ஊதியத்தை தாண்டி மாணவர்கள் மீது பெற்ற பிள்ளைகளை போல ஆசிரியர்களும் அதே அளவு அன்பும், பரிவும், துடிப்பையும் காட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதும்தான். இரண்டாவதாக, வாயில் நுழையாத மருந்துகள், ஊசிகள், உயர்தர சிகிச்சை முறைகள், நவீன மருத்துவ உபகரணங்கள் என எவ்வளவுதான் நம் வாழ்வில் உபயோகப்பட்டாலும், ஒரு நோயாளிக்கு மருத்துவத்தைவிட ஊக்கம்தரும் செயலும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும்தான், உயிரோட்டமாக நிற்கிறது என்பது காலக்கண்ணாடியாக பளிச்சிட்டு நம் கண்முன் நிற்கிறது.












Click it and Unblock the Notifications