தூத்துக்குடி மாணவி புனிதா பலாத்காரம், கொலை வழக்கு: டிசம்பர் 4ல் தீர்ப்பு
தூத்துக்குடி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூத்துகுடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி புனிதா கொலை வழக்கில் டிசம்பர் 4ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன்-இசக்கியம்மாள் தம்பதியரின் 13 வயது மகள் புனிதா. நாசரேத்தில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 2012 ஆம் ஆண்டில் பள்ளிக்கு சென்ற போது தாதன்குளம் ரயில் நிலையம் அருகே வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இதில் ஈடுபட்டதாக மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அரசு வக்கீலாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 21 சாட்சிகளிடம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பால்துரை முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சாட்சி விசாரணைக்கு பிறகு இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி பால்துரை முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பையா பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சி கிடையாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என சுப்பையா தரப்பு வக்கீல் வாதம் செய்தார். அரசு வக்கீல் சந்திரசேகரன் இந்த வழக்கில் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், தடயவியல், அறிவியல் ஆய்வக பரிசோதனை முடிவுகள், சம்பவத்தில் சுப்பையா ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபித்துள்ளன. எனவே இதனை பரிசீலனையில் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால்துரை வழக்கின் தீர்ப்பு வருகிற 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.