கதிராமங்கலத்தில் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு... வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!
ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் வகுப்பை புறக்கணித்து வாயில் கருப்புத் துணி கட்டி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
கதிராமங்கலம் : காவிரிப்படுகையை வேளாண் பாதுகாப்பப்பட்ட இடமாக அறிவிக்க வலியுறுத்தி கதிராமங்கலம் பள்ளி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி எண்ணெய்க் குழாய்களை புதிதாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கைவிடப்பட்ட எண்ணெய்க் குழாய்களை மாற்றும் பணியை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வருகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக கதிராமங்கலத்தில் மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். வெள்ளாலத் தெருவில் இருந்து பேரணியாக சென்று கதிராமங்கலத்தின் அனைத்து தெருக்களிலும் பதாகைகளுடன் கோஷமிட்டவாரே மாணவர்கள் சென்றனர்.
மாணவர்களுடன், பொதுமக்களும் இணைந்து போரராட்டம் செய்தனர். காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பப்பட்ட இடமாக அறிவிப்பதோடு, ஓஎன்ஜிசியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.