திறந்தவெளி கழிப்பிட பிரச்சனை - மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமிக்கத் திட்டம்
விருதுநகர்: திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க கல்வித்துறை புதிய திட்டத்தை யோசித்து வருகிறது.
அதாவது, இதுதொடர்பான விழிப்புணர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்த மாணவர்களை பிரசாரத் தூதுவர்களாக நியமித்து இதைச் சாதிக்க கல்வித் துறை யோசித்து வருகிறது.
பள்ளி கல்வி துறை பள்ளிகளுக்கு இதுதொடர்பாக சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் திறந்த வெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலை, மாலை இறை வணக்கத்தில் திறந்த வெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ, மாணவியருக்கு விளக்க வேண்டும். பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவிகள் பயன்படுத்த செய்ய வேண்டும்.
கிராமங்கள், நகரங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுத்து தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது நலனில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை ஒவ்வொரு தெருவு்க்கும் ஒருவர் வீதம் சுகாதார தூதுவர்களாக நியமிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவி மூலம் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட பெதுமக்களுக்கு உதவ வேண்டும். திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த மாட்டோம் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.