ஜல்லிக்கட்டு போல் மாணவர்கள் வெகுண்டு எழுந்த பஸ் கட்டண உயர்வு போராட்டம்... மற்றொரு புரட்சியா?
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெகுண்டு நிற்கும் அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், ஜல்லிக்கட்டுக்காக வெடித்த புரட்சி போல் வீரியம் அடையும் அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்னர் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து இன்றி தமிழகமே ஸ்தம்பித்தது.
இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த விவகாரத்தை தீர்த்து வைத்தது. இதையடுத்து பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மக்கள் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பினர்.
திடீர் அமல்
இந்நிலையில் கடந்த வாரம் இரவு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. பின்னர் அடுத்த நாள் முதற்கொண்டு இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
திரும்ப பெற முடியாது
சுமார் 66 சதவீதம் அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டதால் அதை திரும்ப பெற கோரி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதை கண்டித்து கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் வேலூர், மதுரை, திண்டுக்கல், நெல்லை, காரைக்குடி, பழனி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் தீவிரம்
இந்த புரட்சி போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை பார்ப்பதற்கு மற்றொரு ஜல்லிக்கட்டு புரட்சி போல் காணப்படுகிறது. அத்தகைய புரட்சி ஏற்படும் அளவுக்கு வீரியமாக உள்ளது.கட்டண உயர்வை திரும்ப பெற்றால் மட்டும் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று மாணவர்களும் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
ஜல்லிக்கட்டு புரட்சி
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினாவில் ஒரு புரட்சி போராட்டமே வெடித்தது.அந்த அளவுக்கு மாணவர்களும், பொதுமக்களும் அறவழியில் போராட்டம் மேற்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினர். மெரினாவில் வெடித்த முதல் புரட்சி தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருவதாகவே பார்க்கப்படுகிறது.