எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தரின் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேந்தர் மூவிஸின் லெட்டர் பேடில் மதன் எழுதியது போல ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அட்மிஷன் வாங்கித் தருவதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலா ரூ 60 லட்சம் வீதம் மதன் பணம் வசூலித்ததாகவும், அந்தப் பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் மருத்துவ படிப்பிற்காக பெரும் தொகை கொடுத்திருப்பதாக ஒவ்வொரு பெற்றோரும் கூறி போராட்டம் நடத்தினர். மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்பிற்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் பணம் செலுத்தியாதாக அவர்கள் புகார் தெரிவித்தினர்.
இதனிடையே எஸ்.ஆர்.எம்.குழுமத்திற்கும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் மதன் என்பவருக்கும் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது போன்று எந்தவொரு தொகையையும், எங்களது நிறுவனத்திடமோ, நிறுவனம் சம்பந்தப்பட்ட எவரிடமோ ஒப்படைக்கவில்லை.
மதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாரிவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.