வாட்டும் குளிரிலும் வதங்காமல் போராடும் இளைஞர்கள்.. மெரீனாவில் விடிய விடிய தொடரும் போராட்டம்!
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்ப
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் மெரீனா கடற்கரையில் திரண்டு, மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
40 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகரான சென்னையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
டார்ச் வெளிச்சம்
செவ்வாய்கிழமையன்று காலையில் தொடங்கிய போராட்டம் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நீடித்தது. பசி, தூக்கம் பார்க்காமல் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் செல்போன் வெளிச்சத்தில் போராட்டம் நீடிக்கிறது.
நெருப்பு சிலம்பம்
நெருப்பு சிலம்பம் சுற்றி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலர் தாளமிட்டும், பாட்டு பாடியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தால் அசம்பாவிதம் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள தனியார், அரசு கல்லூரிகள் நாளை முதல் விடுமுறை அறிவித்துள்ளன.
அண்ணா பல்கலை உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் தனது ஆளுகைக்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு, விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலை விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் உடனே வெளியேறும்படி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் முடிவு
மாணவர்களின் போராட்டத்தை முறியடிக்கவே, அரசு உத்தரவின் பேரில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனினும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தாலோ, விடுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டாலோ மட்டும் போராட்டத்தை நசுக்கி விட முடியாது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.