வீட்டை விற்றுப் பணம் தர்றேன், என் மகனைக் கண்டுபிடிங்க - சுபாஷ் சுரேஷ் தாயார் உருக்கம்
புதுச்சேரி: சிதம்பரம் அருகே மாயமான விமானத்தை தேட தனது வீட்டை விற்று பணம் தருவதாக விமானத்தில் இருந்த சுபாஷ் சுரேஷின் தாயார் வேதனையோடு கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடந்த மாதம் 8 ஆம் தேதி டார்னியர் விமானம் மாயமானது. கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரிலையன்ஸ் நிறுவன ‘'ஒலிம்பிக் கேன்யான்'' என்ற ஆராய்ச்சி கப்பல் உள்ளிட்டவை தேடுதல் பணிக்கு பயன்படுத்தியும், விமானம் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் திரும்ப பெறப்பட்டன.

காணாமல் போன விமானத்தில் பயணித்த விமானிகள் மனோஜ்சோனி, வித்யாசாகர், படைவீரர் சென்னையைச் சேர்ந்த சுபாஷ் சுரேஷ் ஆகியோரது குடும்பத்தினர் சர்வதேச உதவியை பெற்று தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா, விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று சுபாஷ் சுரேசின் குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், "மாயமான ரோந்து விமானம் இலங்கை கடற்பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு தேடுதல் பணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் கடல் எல்லையில் விமானம் குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. தற்போதும் நம்பிக்கையை கைவிடவில்லை. இன்னும் வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் படைவீரர் சுபாஷ்சுரேசின் தாயார் பத்மசங்கரி கூறுகையில், "தேச சேவையில் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு தான் அவன் இந்த பணியில் சேர்ந்தான். அவன் முகத்தை நான் காணவேண்டும். என்ன நடந்தது என்று எனக்கு தெரிய வேண்டும். இவ்விஷயத்தில் உண்மை விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. ஒரு தாயின் வேதனைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். தேடுதல் செலவுக்காக எனது வீட்டை விற்று பணம் தரவும் தயார்.

தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, எங்களின் நிலை குறித்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி கடிதம் அனுப்பி உள்ளேன். முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டுக்காக உழைக்கும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது விரக்தியை ஏற்படுத்தி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications