தூத்துக்குடி அருகே பலத்த சூறை காற்றால் வாழைகள் சேதம்.. விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீசிய திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் அனைவரும் கவலையில் உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீசிய திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கவலையில் உள்ளனர். இதனால் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்தது. போதிய மழை இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வந்தனர். இந்தப் பகுதியில் வாழைகள் பயிர் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை காப்பாற்ற தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தாமிரபரணியில் தண்ணீர் திறந்தும் கூட விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழைகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கருகும் நிலையில் இருந்த வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். வாழைகள் குலை தள்ளிய நிலையில் இருந்ததால் கூடிய விரைவில் அறுவடை செய்து விடலாம் என்று விவசாயிகள் நினைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. சுமார் 20 நிமிடங்கள் வீசிய சூறை காற்றில் செய்துங்கநல்லூர், தூதுகுழி, முத்தலாங்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த குலை தள்ளிய வாழைகள் அனைத்தும் சேதமடைந்தன.
இதனை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தாமிரபணியில் தண்ணீர் திறந்து விட்டும் பயனில்லாமல் போய்விட்டது என்று கவலை தெரிவித்தனர்.