அடிக்கும் அனல்... அவதியில் மக்கள்... அதிகரிக்கும் நோய்கள்
சென்னை: அக்னி நட்சத்திர காலம் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் இருந்தாலும் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே சதத்தை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வரை கொளுத்தியுள்ளது வெயில்.
வெயில் கால நோய்களான வேர்க்குரு.... வேனல் கட்டி, கண் நோய்கள், சின்னம்மை போன்ற நோய்களும் ஆங்காங்கே பரவி வருவதால் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோடை வெப்பம் தமிழகத்தில் அதன் உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ள நிலையில், மே மாதத்தில் தமிழகத்தில் வெப்ப நிலை 108 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு மேலும் செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொளுத்தும் வெப்பம்
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை கொட்டித் தீர்த்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது வாரத்தில் இருந்தே வெயில் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மே மாதத்தின் மத்தியில் அடிப்பது போன்ற வெயிலை உணர முடிந்தது.
கோடை கால வெப்பம்
ஈரோட்டில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வரை 97, 98 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிக் கொளுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை 102 டிகிரியாக இருந்த வெயில், கடந்த 3 தினங்களாகவே தகிக்கிறது.
அவதியில் மக்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. காலை 8 மணிக்கே வெயில் அடிப்பதால் மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
புழுக்கத்தில் தவிப்பு
அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
குளிர்பானங்களை நாடும் மக்கள்
தொடர்ந்து அடிக்கும் வெயில் காரணமாக குளிர்பானக் கடைகளிலும், சாலையோர இளநீர், தர்ப்பூசணி, நுங்கு கடைகளிலும், கரும்புச்சாறு, கம்பங்கூழ் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. முலாம்பழம், தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நோய் பாதிப்பு
வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் தொற்று தாக்குகிறது. அதிக உஷ்ணம் காரணமாக, அம்மை, வியர்க்குரு, வேனல் கட்டி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
அதிக வெப்பம் ஏன்?
பொதுவாக ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி குளிர் காலம், மார்ச் முதல் மே மாதம் வரை கோடைக்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று வீசும் இந்தக் காலத்தில் கோடைத் தாக்கம் குறையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக் காலம். எனவே, இதனைப் பார்க்கும்போது, தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
வெப்பமயமாதல்
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெப்பத்தைக் காட்டிலும் 1 டிகிரி வெப்பம் தற்போது அதிகரித்துள்ளது. வெப்ப டிகிரி அளவு அதிகரித்து வருவதன் காரணம் (வெப்பமயமாதல்) தற்போது கோடைக்கு முன்பே வெயில் தாக்கம் ஏற்படுகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வறண்ட வானிலை
வறண்ட வானிலை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். ஏப்ரல் மத்தியில் சென்னைக்கு கடும் வெப்பத்திலிருந்து சற்றே விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை மழைக்கு வாய்ப்பு
வெயில் கொளுத்தினாலும் அவ்வப்போது மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மே மாதத்தில் பகல் வெப்ப நிலை 108 டிகிரி மற்றும் அதற்கு மேலும் செல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
வறண்ட காற்று
மேல்காற்று காரணமாக வறண்ட காற்று வீசுவதால் வெப்ப நிலை அதிகரிக்கிறது. ஆனால் இந்த மாதத்தில் இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மார்ச் இறுதியில் மழை
சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் மார்ச் மாத வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து வந்தாலும், முன்பாகவே வெப்ப தரைக்காற்றினால் வெப்ப நிலை இதற்கு முன்னரே 102 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஆனாலும் இந்த மாத இறுதிவாக்கில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தப்பிக்க என்ன வழி
வெயிலில் பாதிப்பு குழந்தைகளையும், வயதானவர்களையுமே அதிகம் பாதிக்கும் என்று கூறும் நிபுணர்கள், இதில் இருந்து விடுபட, இளநீர், மோர், தண்ணீர், பழங்கள், பழச்சாறு, கீரை உள்ளிட்ட சத்தான உணவு அளிப்பது அவசியம் என்கின்றனர்.