சென்னையில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளிக்கு இலங்கைக்கான பாக். தூதர் உதவி- 'திடுக்' தகவல்!
சென்னை: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ஆதரவாக செயல்பட்டதாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபருக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர் உதவி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜாகீர் ஹூசைன் என்பதாகும். சென்னை நகரில் தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற மத்திய உளவுப்பிரிவின் எச்சரிக்கையை அடுத்து தமிழக போலீசாரும், சிஐடி க்யூ பிரிவு போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளையும், புகைப்படங்களையும் வைத்திருந்த நபரை கைது செய்தனர்.
பாகிஸ்தான் ஏஜென்ட்
விசாரணையில் அவனது பெயர் ஜாகீர் ஹூசைன் வயது 37 என்பதும்,. இலங்கையில் தங்கி, பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
தாக்குதலுக்குத் திட்டம்
போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை நகருக்குள் மேலும் இருவரை ஊடுருவ வைக்க முயற்சி மேற்கொண்ட அவன், பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக விசாரணையில் தெரிவித்துள்ளான். அவனை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்.தூதர் உதவி
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரின் உதவியினாலேயே சென்னை வந்ததாக அந்த உளவாளி தெரிவித்துள்ளான். இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாகவும் அவன் கூறியுள்ளான்.
ஆவணங்கள் பறிமுதல்
ஜாகீர் ஹூசைனிடம் இருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கியூபிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவனிடம் இருந்து அமெரிக்க துணை தூதரகம் உள்ளிட்ட முக்கிய புகைப்படங்களையும், வெளிநாட்டு கரன்சிகளையும் கைப்பற்றினர்.
சிமி அமைப்புடன் தொடர்பு
பயங்கரவாத அமைப்புகள் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜாகீர் ஹூசேனை கைது செய்துள்ளதாகவும், அவர் சிமி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ரகசிய திட்டம்
பாகிஸ்தான் உளவாளி சென்னை வந்ததன் நோக்கம்? அவரின் கூட்டாளிகள் யார் ? அவர்களின் திட்டம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று கைது
இதனிடையே நேற்றுதான் பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஞாயிறன்றே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.