சுவாதி கொலையாளி இவன்தான்... கன்பார்ம் செய்த போலீஸ்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில், பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தப்பிச்செல்லும் புதிய சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சந்தேகப்படும் நபர்தான் கொலையாளி என்பதை ரயில்வே போலீசார் உறுதி செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்சார ரயிலுக்காக காத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி, மர்ம இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சுவாதியை மிகவும் துணிச்சலுடன், ரயில் நிலையத்தில் வைத்தே வெட்டிக்கொன்ற கொலையாளி, சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சுவாதி வெட்டுபட்ட போது, ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த யாருக்கும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றோ, கொலையாளியை பிடிக்க வேண்டும் என்றோ தோன்றாமலேயே போய் விட்டது கொலைச் சம்பவத்தை விட கொடுமையானது.
ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இந்த சம்பவத்தை செல்போனில் கூட யாரும் படம் எடுக்கவில்லை ஒருவேளை அப்படி யாராவது பதிவு செய்திருந்தாலாவது இந்த நேரத்தில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்திருக்கலாம் என்பது பலரது ஆதங்கமாக உள்ளது.
சுவாதியை கொலை செய்த இளைஞர் யார் என்பது குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் இளைஞர் தப்பிச்செல்லும் புதிய வீடியோ காட்சிகளை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீசாரிடம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் வாலிபர், ரயில்வே பார்டர் ரோடு வழியாக சென்று, அதே பகுதியில் உள்ள 7வது தெரு வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள பயிற்சி மையம் ஒன்றில் அந்த குறிப்பிட்ட காட்சி பதிவாகியிருந்ததாக போலீசார் கூறினர். குறிப்பிட்ட பதிவில் உள்ள இளைஞரின் அடையாளங்கள், சந்தேகிக்கப்படும் இளைஞரின் அடையாளங்களோடு ஒத்துப்போவதாகவும், சந்தேகப்படும் நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்தவர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதன் மூலம் சுவாதி கொலை வழக்கில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே சுவாதியை பின்தொடர்ந்தாகக் கூறப்படும் நபரை பற்றி அறியும் வகையில் சுவாதி ரயில்நிலையத்திற்கு வரும் வழியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றி பதிவான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சுவாதியை கொல்ல கொலையாளி பயன்படுத்திய கத்தியில் பதிவாகியுள்ள கைரேகைகள், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் ஒத்துப்போகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் இளைஞரின் சிசிடிவி கேமரா பதிவுகள், கத்தி கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. போலீசார் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். விரைவில் கொலையாளி சிக்குவான் என எதிர்பார்க்கப்படுகிறது.