சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு... ராம்குமாருக்காக களம் இறங்கும் சங்கரசுப்பு உட்பட 5 வக்கீல்கள் 'டீம்'
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கோரி புதிய மனு வரும் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ராம்குமாருக்காக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு உட்பட 5 பேர் கொண்ட குழு களமிறங்கப் போவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சென்னை கொண்டு வரப்பட்ட ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராம்குமார் சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ராம்குமார், தான் ஒரு அப்பாவி என்றும், சுவாதியை கொலை செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே ராம்குமாருக்கு ஜாமீன் கேட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி திடீரென விலகினார். இந்நிலையில் ராம்குமாரின் சார்பில் ராம்ராஜ் என்ற வழக்கறிஞர் புதிதாக ஆஜராக முடிவு செய்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆற்று வழி கிராமத்தை சேர்ந்தவர். சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
புழல் சிறையில் உள்ள ராம்குமாரை நேற்று நேரில் சந்தித்து பேசிய பின்னர், ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ராம்குமாருக்காக வழக்கறிஞர்கள் 5 பேர் கொண்ட குழுவாக வாதாட உள்ளோம். வரும் திங்களன்று மீண்டும் புழல் சிறையில் சென்று ராம்குமாரை சந்தித்து பேச உள்ளேன். அப்போது அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், வருகிற 13-ந்தேதி ராம்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. அதனை நிச்சயமாக வெளியில் கொண்டு வருவோம். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர் எனவும் மாலை நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமராஜ் கூறியுள்ளார்.
ராம்குமார் குற்றவாளி அல்ல என வாதாட 5 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு களமிறங்குவது சுவாதி கொலை வழக்கில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications