கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான மதுக்கடைகள் நெடுஞ்சாலையில் இருந்து அவசர அவசரமாக ஊருக்குள் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்து பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுக்கடைகளை அகற்றக்கோரி மக்கள் சூறையாடி வருகின்றன.,
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பம் முதலே மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாமக, கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
2013ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
2013-ஆம் ஆண்டு விடுதலை நாள் அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக 2000-க்கும் மேற்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த தீர்மானங்களின் அடிப்படையில் பல கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளன.
கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்
எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது; ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பும் பொது மக்கள் அதை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புமணி வேண்டுகோள்
அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும். அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.