தமிழகத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு 2 பேர் பலி- வெப்பம் படிப்படியாக குறையுமாம்
சென்னை: தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடைக் காலத்துக்கான இயல்பு வெப்ப நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு நேற்று கோவை, தாராபுரத்தில் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்தது. மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசுவதாலும், கடல் காற்று உருவாவதற்கு தாமதிப்பதாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் தகித்தது.
வேலூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு 111 டிகிரி வெப்பம் பதிவானது. திருச்சியில் 110 டிகிரியும், உள் மாவட்டங்களில் 108 டிகிரி வெப்பம் தகித்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டதால், புழுக்கம் அதிகரித்தது.
தமிழகம் முழுவதும் இன்று வெப்பம் தணிந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் "தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுவதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இருந்த அளவைவிட வெயிலின் கடுமை சற்று தணியும், இந்த மாதத்துக்கான இயல்பை ஒட்டியே வெப்பம் பதிவாகும் என்று தெரிவித்தார்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், ஆய்க்குடி, ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். 29, 30ம் தேதிகளில் தமிழகத்தில் பரவலாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெயிலுக்கு இருவர் பலி
கோவை கணபதிபுதூரில் நேற்று முன்தினம் கட்டிடப் பணி யில் ஈடுபட்ட எஸ்.சுரேஷ் என்பவர் கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று சாலையில் நடந்து சென்ற தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து வெயிலுக்கு பலியானார்.