தமிழகத்தில் அடுத்த மாதமே கூட பொதுத் தேர்தல் வரும் சூழல்தான் உள்ளது! - ப சிதம்பரம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதமே கூட பொதுத் தேர்தல் வரும் சூழல்தான் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறினார்.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ப சிதம்பரம் பேசுகையில், "தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்கள் அதிமுகவிடம் வழங்கிவிட்டனர். திமுகவை பிரதான எதிர்க்கட்சியாக சட்டப் பேரவையில் அமர்த்தினர். சாதாரணமாக ஆளுங்கட்சிதான் வலுவாக இருக்கும். எதிர்க்கட்சியில் சில சிக்கல்கள் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சி பலவீனமாகவும், எதிர்க்கட்சி வலிமையாகவும் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், ஜெயலலிதா அரசு செய்த ஒரே சாதனை கடன் வாங்கியதுதான். இதனால் தமிழகம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்துகிறது. அடுத்த 5 ஆண்டுகளும், அதிமுக ஆட்சியே தொடர்ந்தால், தமிழகத்தின் மீதான கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும்.
தமிழகத்தில் மணல் கொள்ளை, கிராணைட் ஊழல் நடக்கிறது. தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அமைச்சர் வீடு, ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை நடக்கிறது. இதுவரை பார்க்காத காட்சிகள் இவை.
இனி வரும் காலங்களில் இந்நாள் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறும். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இப்போதுள்ள சூழலில் அடுத்த மாதமே கூட தமிழகத்துக்கு பொதுத் தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆட்சி மாற்றம் வருவதே நல்லது," என்றார்.