ரவுடி ஆசைத்தம்பி முதல் 'சகுனி' கார்த்திக் வரை - தமிழ்நாடு போலீஸ் என்கவுண்டர் லிஸ்ட்
மதுரை சிக்கந்தர் சாவடியில் போலீஸ் என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி இருவரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 79 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. இன்று மதுரையில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி இருவரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் காவல்துறை சிம்ம சொப்பனமாக இருக்கும்.
கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜெயலலிதா பதவிக்காலத்தில் மட்டும் 11 ரவுடிகளை போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுக்கொலை
சென்னை மாநகர ஆணையராக விஜயக்குமார் இருந்தபோதுதான் வீரமணி, வெங்கடேச பண்ணையார் ஆகியோர் சுட்டுக் கொல்லபப்ட்டனர். மேலும் தமிழ் தேசியவாதிகளான ராஜாராம் மற்றும் சரவணன் ஆகியோரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்று மதுரையில் 2 ரவுடிகள் போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டிருப்பதும் கூட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1980ல் தொடங்கிய என்கவுண்டர்
தமிழகத்தில் 1980களில் நக்சலைட்கள் தலை தூக்கிய போது என்கவுண்டர் சம்பவங்களை நடத்தியவர் போலீஸ் அதிகாரியாக இருந்த தேவாரம். நக்சலைட்கள் பலர் போலீஸாருடன் நடந்த மோதலின்போது கொல்லப்பட்டனர். அதன் பின்னர் திண்டுக்கல் எஸ்பியாக சைலேந்திர பாபுவும் நக்சலைட் வேட்டையை தொடர்ந்தார். நக்சலைட்டுகளுக்கு எதிரான என்கவுண்ட்டர் ரவுடிகள் பக்கம் திரும்பியது. 1998ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின்போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுப்பிடிக்கும் போலீஸ்
2002ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரவுடி வீரமணி
2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் சென்னை கடலில் வைத்து சென்னை மாநகரையே நடு நடுங்க வைத்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணி சுட்டு வீழ்த்தப்பட்டான்.
சந்தன கடத்தல் வீரப்பன்
2004 ல் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுண்டரை செய்தது அப்போது அதிரடி படைக்கு தலைமை தாங்கிய விஜயகுமார் ஐபிஎஸ், வெள்ளைத்துரை.
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி
2007ம் ஆண்டு சென்னையை கலங்க வைத்த ரவுடிகளில் ஒருவனான வெள்ளை ரவி போலீஸ் படையால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான். இவன் போதை மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவன்.
டாக்சி டிரைவர் சுட்டுக்கொலை
2010ம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகி, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்சி டிரைவர் மோகன் ராஜ் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.
ஆல்வின் சுதன் கொலை குற்றவாளிகள்
2010 பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலுவை போலிசார் சுட்டுக் கொன்றனர். 2012 ஆம் ஆண்டு சிவகங்கை, காவலர் ஆல்பின் சுதன் கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்
சென்னை என்கவுண்டர்
2012 சென்னை, வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் என்கவுண்டர் முறையில் கொன்றனர்.
ரவுடிகள் சுட்டுக்கொலை
2018 மார்ச் 1ல் மதுரை ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி சுட்டுக்கொல்லப்பட்டனர். மாயக்கண்ணன் தப்பிவிட்டார்