தமிழினத்தை காக்கும் ஜெ.வின் பணி தொடர வேண்டும்.. வேல்முருகன் வாழ்த்து
சென்னை: தமிழக முதலமைச்சராக 6வது முறையாக பதவியேற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் வாழ்வுரிமைக்காக, தமிழர் நலனுக்காக நல்லாட்சியை வழங்கியவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த சாதனைக்காகவே தமிழக மக்கள் மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியாசனத்தில் அமர வைத்துள்ளனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது, 7 தமிழர் விடுதலைக்கான உறுதியான நடவடிக்கைகள், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானம் என தமிழினத்தின் நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டுள்ளார்.
இனி வரும் 5 ஆண்டுகாலமும் அதேபோல் தமிழகத்தின், தமிழினத்தின் உரிமைகளை பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் அவரது பயணம் தொடர வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் பெரும் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
தமிழினத்தின் நலனுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
பெரும் வெற்றி சரித்திரம் படைத்து 6-வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் ஜெயலலிதாவிற்கு மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications