மாணவர்கள் கத்தி, கத்தி படிக்கலாம்... ஆனால் கத்தியோடு படிக்கக் கூடாது... சொல்கிறார் தமிழிசை
மாணவர்கள் கத்தி, கத்தி படிக்கலாம், ஆனால் கத்தியோடு படிக்கக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: மாணவர்கள் கத்தி கத்தி படித்துக் கொள்ளலாம். ஆனால் கத்தியோடு படிக்கக் கூடாது என்று சென்னை மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலின்போது கத்தியுடனும், வாள்போன்ற நீண்ட அரிவாளுடனும் விரட்டி விரட்டி வெட்டினர். இதை பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் எற்பட்டுள்ளது. ஆயுதம் கொண்டு வந்த மாணவர்கள், ஒரு பெட்டியில் இருந்த மாணவர்கள் துரத்தி துரத்தி வெட்டினர்.
காயமடைந்த மாணவர்கள்
இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் மாணவர்கள்
வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் போலீஸார் இருவரை கைது செய்தனர்.
அதிர்ச்சியில் மக்கள்
சென்னையில் சமீபகாலமாக மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய பிளாட்பார்மில் கோடு போட்டு பயணிகளை அச்சுறுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படிக்கலாம்
இந்த சம்பவம் குறித்து தமிழிசை தெரிவிக்கையில், மாணவர்கள் கத்தி கத்தி படிக்கலாம். ஆனால் கத்தியோடு படிக்கக் கூடாது. இது நல்லதல்ல என்றார் அவர்.