தமிழகத்தில் இதுவரை ரூ.12 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினரால், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதற்காக, பறக்கும்படையினர், கண்காணிப்பு குழுவினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
தேர்தல் பறக்கும் படையினர் தருமபுரி, ஈரோடு, நாமக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 21) வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மொத்தம் ரூ.30.37 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உரிய அனுமதியில்லாமல் கொண்டு சென்றதாக 95 சமையல் எரிவாயு அடுப்புகள், 43 குக்கர்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன. பறக்கும் படையால் இதுவரை ரூ.5.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மூலம் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 21) வரை ரூ.6.47 கோடி கைப்பற்றப்பட்டு சார் கருவூலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
2 லட்சம் புகார்கள்: சுவர் விளம்பரம் செய்தது, கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றாதது, அனுமதியில்லாமல் கட்சி கொடிக் கம்பங்களை வைத்தது போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புதன்கிழமை வரை 2.01 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, 1.07 லட்சம் புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதால் புகார்கள் விலக்கி கொள்ளப்பட்டன.
வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியது, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது, ஒலிபெருக்கி விதியினை மீறியது போன்ற காரணங்களுக்காக இதுவரை 1,493 வழக்குகள் பதிவு செய்யபப்பட்டுள்ளன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.