திருடனைப் பிடிக்கணும்னா நல்லா ஓடுங்க… போலீஸ் எஸ்.ஐ., உடற்கூறு தகுதி தேர்வு
சென்னை: ஏழு நிமிடத்தில், 1,500 மீட்டர் ஓட்டம், டிஜிட்டல் மீட்டரை கொண்டு, உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் என பரபரப்பாக நடந்து வருகிறது தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பதவிக்கான உடற்கூறு தகுதித் தேர்வு.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி 8ஆம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், அறிவிப்பு வெளியானது.
மொத்த ஒதுக்கீட்டில், 20 சதவீதம், காவல் துறையில் பணிபுரிவோர், அவரது வாரிசுதாரர், அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இணையம் வாயிலாக, 1.66 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
எழுத்துத் தேர்வு
மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 114 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு மே, 23ம் தேதி,அடுத்த நாள் காவல் துறையினருக்கு எழுத்து தேர்வு நடந்தது.
இந்த தேர்வில் பல குளறுபடிகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.tnusrbexams.net) தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அழைப்புக்கடிதம்
இத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கு உடல் தகுதித் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை அந்தத் தேர்வு வாரியம் அனுப்பியது. இதையடுத்து உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.
உடற்கூறு தேர்வுகள்
ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை, மார்பளவு அளத்தல், நீளம், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடல் திறன் தேர்வுகள் நடக்க உள்ளன. இதில் தேர்ச்சி பெறுவோரில், 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.
சென்னையில் தேர்வு
சென்னையில் இந்தத் தேர்வு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இத் தேர்வில் பங்கேற்பதற்காக 635 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 632 பேர் தேர்வில் பங்கேற்க வந்திருந்தனர்.
அளவு சரிபார்த்தல்
தேர்வில் பங்கேற்றவர்களுக்கு முதல் கட்டமாக மார்பளவு, உயரம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் சரியான அளவுடையவர்கள் மட்டும் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அடுத்த கட்ட தேர்வாக 1,500 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
அதிகாரிகள் கண்காணிப்பு
தேர்வை பெருநகர காவல்துறை இணை ஆணையர் நாகராஜன், துணை ஆணையர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர். இன்று காவல்துறை ஒதுக்கீட்டுத்தாரர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு இம் மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலத்தில் தேர்வு
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ச்சிப்பெற்ற, 523 பேருக்கு, உடற்கூறு தேர்வு, நேற்று, சேலம், குமாரசாமிப்படி, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், துவங்கியது.
260 பேர் பங்கேற்பு
முதல் நாளான நேற்று, பொதுப்பிரிவில் தேர்ச்சிப்பெற்ற ஆண்கள், 325 பேர்; திருநங்கைகள் இருவர் என, 327 பேருக்கு, அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 260 ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். இரு திருநங்கைகள் உள்பட 60 பேர், உடற்கூறு தேர்வில் பங்கேற்கவில்லை.
1500 மீட்டர் ஓட்டம்
தொடர்ந்து, முதல் முறையாக டிஜிட்டல் மீட்டரை கொண்டு, உயரம் மற்றும் மார்பளவு, தசம கணக்குபடி, துல்லியமாக கணக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், 1,500 மீட்டர் தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது. இத்தகைய தேர்வில், 194 பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றனர்.
வீடியோவில் பதிவு
உயரம் மற்றும் மார்பளவு குறைபாடு, குறிப்பிட்ட ஏழு நிமிடத்தில், 1,500 மீட்டர் ஓட முடியாமல் போனது என, 73 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். காலை துவங்கி மாலை, 5 மணி வரை நடந்த உடற்கூறு தேர்வு, முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இன்றையதினம் பொதுப்பிரிவில் தேர்வான பெண்கள், 118 பேருக்கு, 100 மீட்டர், அல்லது 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், அல்லது கிரிக்கெட் பால் எறிதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டி நடத்தப்படும்.
கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல்
தேர்வான, 194 பேருக்கு, ஆகஸ்ட் 5ம் தேதி கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. அவர்களை தொடர்ந்து, போலீஸ் துறையை சேர்ந்த, 78 பேரில், ஆண்களுக்கு, 1,500 மீட்டர் ஓட்டமும்; பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்ட தேர்வும் நடக்கிறது.
ராமநாதபுரத்தில்
ராமநாதபுரத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தலைமையில் தேர்வு நடந்தது. தென்மண்டல ஐ.ஜி. அபயகுமார்சிங் சிறப்பு ஆய்வு அதிகாரியாக இருந்து தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திங்கள்கிழமை தொடங்கிய சப்- இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பொதுப் போட்டியாளர்கள் 142 பேர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில்
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 6 மணிக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது. ஆண்கள் 430 பேர், பெண்கள் 195 பேர் என மொத்தம் 625 பேர் கலந்து கொண்டனர்.