மாற்று அரசியல் வேண்டும்.. ரஜினி, கமல் வர வேண்டும்.. தமிழிசை "நறுக்" பேச்சு!
சென்னை: தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குப் போய் விட்டு வந்துள்ளார். ரஜினி வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொலுவைக் காண போயிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தான் அங்கு அரசியல் பேசியதாகவும், ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்றும் மீண்டும் ரஜினியைப் பார்க்கப் போவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியை பாஜக தன் பக்கம் இழுக்க கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் தமிழிசையின் ரஜினி வீட்டு விசிட் பரபரப்பாகியுள்ளது.
கொலு பார்க்கப் போனேன்
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், கொலு நிகழ்ச்சிக்குத்தான் சென்றிருந்தேன். மோடி பற்றி நான் எழுதிய புத்தகத்தை லதா ரஜினிகாந்த்திடம் வழங்கினேன். இந்தியாவை தூய்மைப்படுத்தும் மோடியின் திட்டத்தை அவர் வெகுவாக பாராட்டினார்.
ரஜினி வந்ததும் மீண்டும் போவன்
ரஜினி வந்ததும் மீண்டும் வந்து சந்திப்பதாக கூறி இருக்கிறேன். ரஜினிக்கும் மோடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. பா.ஜனதாவின் திட்டங்களை அவர் பாராட்டி இருக்கிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்ததும் பாராட்டு தெரிவித்தார்.
ரஜினி, கமல் போன்றோர்
ரஜினி, கமல் போன்றோர் சமூக அக்கறையோடு செயல்படுபவர்கள். அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும்போது வாய்ஸ் கொடுப்பவர்கள்.
அசாதாரணமான சூழலில் தமிழகம்
தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறார். மற்ற கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
மாற்று வேண்டும்... ரஜினி, கமல் வர வேண்டும்
தமிழகத்தில் மாற்று அரசியல் வரவேண்டும். மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே இந்த நேரத்தில் மாற்றத்தை உருவாக்க ரஜினி, கமல் போன்றவர்கள் முன் வர வேண்டும். ஒதுங்கி இருக்க கூடாது.
பாஜகவை ஆதரிக்க ரஜினியை வலியுறுத்துவேன்
ரஜினியை சந்திக்கும் போது பாரதீய ஜனதாவை ஆதரிக்கும்படி நிச்சயமாக வலியுறுத்துவேன் என்றார் தமிழிசை.
கமலையும் சேர்த்து இழுக்க முயற்சியா...
தமிழிசையின் பேச்சைப் பார்க்கும்போது ரஜினி மட்டுமல்லாது கமலையும் சேர்த்து இழுக்க முயற்சிக்கிறதோ பாஜக என்ற தோற்றமே ஏற்படுகிறது.
கமல் என்றால் சமஸ்கிருதத்தில் தாமரை என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது!