பறவைகளின் புகலிடமாக விளங்கும் தாமிரபரணி - 9,000 பறவைகள் கூடுதல் விசிட்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பில் புதிதாக 9 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் சிறிய வகை ஆறுகளால் அதிக அளவில் வயல்களில் நெல் பயிரிடப்படுவதால் அவை பறவைகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இம்மாவட்டக் குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இக்குளம் குட்டைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக இக்குளங்களில் அகத்திய மலை சமுதாய இயற்கை வள பாதுகாபபு மையம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. வனத்துறை, மணிமுத்தாறு அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம், முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை நடந்தின. சுமார் 53 குளங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 60 இனங்களை சேர்ந்த 67 ஆயிரம் பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கோழி, ஊசிவால் வாத்து, தாமரை சிறவி, சில்லிதாரா வாத்தினங்களும், பூநாரா, புதிய வரவாக காஸ்பியன் ஆலா, வெண்கழுத்து நாரை, தண்ணீர்கோழி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு கணக்கெடுப்பில் மொத்தம் 58 ஆயிரம் பறவைகள் இருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 9 ஆயிரம் பறவைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
என்று பறவைகள் கணக்கெடுப்பு ஓருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.