கரண்ட் பில் கட்டப் போறீங்களா? இதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி யார், யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான மின் கட்டண புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 91 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்கள் பயனடைகிறார்கள். ஏற்கனவே குடிசைகள் மற்றும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.