சொந்த ஊரில் தமிழ்ப் பள்ளி தொடங்குவேன்! - தருண் விஜய்
சென்னை: தமிழ் பாரம்பரிய மொழி. அதனை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல என்பதாலும் தமிழின் இனிமையை பிற மொழி மக்களும் உணர வேண்டும் என்பதால்தான் குரல் கொடுக்கிறேன். என் சொந்த ஊரில் தமிழ்ப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று உத்தர்காண்ட் பாஜக எம்பி தருண் விஜய் கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், தமிழ் மொழிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இவரது தமிழ்ப் பற்றை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் நேற்று கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில் பாராட்டு விழா நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக வந் திருந்த தருண் விஜய் அளித்த பேட்டியில், "எனக்கு வைரமுத்து பாராட்டு விழா நடத்தக் காரணம் தமிழ்தான். அவர் நாத்திகர். நான் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கத்தில் உள்ளவன். கொள்கைகளை மீறி எங்களை தமிழ்தான் இணைத்திருக்கிறது.

திருவள்ளுவர், பாரதியார் வளர்த்த தமிழ்
நான் பிறந்த உத்தராகண்ட் மாநிலம், பாரம்பரியான புனிதத் தலங்களை கொண்டது. அங்குள்ள ஆலயங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருவதை இளம் வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யா இதழின் ஆசிரியராக இருந்தபோதே பாரதியாரைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். திருவள்ளுவர், பாரதியார் வளர்த்த தமிழ், பல்வேறு பக்தி இலக்கியங்களைக் கொண்டுள்ளது. எனவே, தமிழ்மொழியை காக்க வேண்டும் என்ற ஈடுபாட்டின் பேரில் தமிழுக்காக குரல் கொடுத்து வரு கிறேன்.

நல்லதல்ல
தமிழ் என்பது இந்தியாவின் பழமையும் பாரம்பரியமும் கொண்ட மொழி. இந்தக் காலத்தில் ஆங்கில கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே போவதால், வடக்கிலுள்ள முக்கிய நகரங்களில் இந்தியை மறப்பது போல் தமிழகத்திலும் தமிழ் புறக்கணிப்பு உள்ளது. நமது பாரம்பரியமான மொழிகளை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல.

இந்தி, சமஸ்கிருத திணிப்பு இல்லை
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக அரசு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க வில்லை. இந்தியும், சமஸ்கிருதமும் நமது தேசிய மொழிகளாகும். இதை முன்னெடுக்க வேண்டிய செயலில்தான் அரசு இயங்கியது. தமிழர்கள் மீது இந்தியையும் சமஸ்கிருதத் தையும் திணிக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும் வேண்டாம் என்றால் அதை அவர்கள் விட்டுவிடலாம்.

தமிழ்ப் பள்ளி
திருவள்ளுவர் பிறந்தநாளை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும். குஜராத் நீதிமன்றத்தில் குஜராத்தி மொழியில் வாதாடுவதுபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும், இந்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனமான மாக்சான் டாக் , கடல் கடந்து வாணிபம் செய்த ராஜேந்திர சோழனின் படத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். விரைவில் எங்கள் ஊரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை தொடங்க உள்ளேன்.
-இவ்வாறு தருண் விஜய் கூறினார்.












Click it and Unblock the Notifications