அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து தப்பி ஓடிய வரி வசூல் அதிகாரி!
நாகர்கோவில்: அதிகாரிகளின் தொடர் மிரட்டலால் பயந்து போன வரி வசூலிப்பு அதிகாரி மாயமானார். இதுகுறித்துப் போலீஸாருக்குப் புகார் செல்ல போலீஸார் அவரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சியில் வரி வசூலராக பணியாற்றி வந்தவர் ராஜூ. இவர் நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர். கடந்த 6ம் தேதி அலுவலகத்திற்கு செல்வதாக தாயாரிடம் கூறி விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜூவை தேடி வந்தனர். இதற்கிடையே வரி வசூலிக்க கோரி அதிகராரிகள் தொடர்ந்து மிரட்டியதால்தான் ராஜூ மாயம் ஆனார் என எஸ்பியிடம் அரசு ஊழியர் சங்கம் மனு கொடுத்தது. இதனால் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலையில் வடசேரியில் உள்ள சிவன் கோவிலில் ராஜு இருப்பதாக அவரது சகோதரருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்று தனது சகோதரரை அழைத்து கொண்டு கோட்டார் காவல் நிலையம் வந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நுடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது ராஜு கூறுகையில், சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அதிகாரி ஓருவர் என்னை கடுமையாக திட்டினார். வரி வசூலிக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு போ, நீ வேலைக்கு லாயக்கு அற்றவன் என்றெல்லாம் கூறினார். இதனால் மனம் உடைந்தேன். இதன் காரணமாக யாரிடமும் சொல்லாமல் கோயிலுக்கு சென்று தங்கி வந்தேன். கடைசியாக வடசேரி சிவன் கோவிலுககு சென்ற போது எனது சகோதரர் வந்து கூட்டி வந்தார் என்றார்.
உயர் அதிகாரிகள் தொல்லையால் வரி வசூலிப்பு அதிகாரி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications