ஏடிஎம் பூத்தில் கேட்பாரற்று கிடந்த 10 ஆயிரம்… போலீசிடம் ஒப்படைத்து சபாஷ் வாங்கிய ஆசிரியர்
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் பெண் ஆசிரியர் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி: ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கச் சென்ற ஆசிரியர் ஏரலுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் இயந்திரத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் கேட்பாரற்று இருந்துள்ளது. இதனை அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஆசிரியர். அவரை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.
ஏரல் அருகே கீழதொண்ட நல்லூர் கீழ தெருவை சேர்ந்தவர் யாசீர் மனைவி யாஸ்மீன் பர்வினா. இவர் ஏரல் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை பாத்திமா. அவரது கணவர் உபைதுல்லா கத்தார் நாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் பாத்திமா தனது அக்காள் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் யாஸ்மின் மற்றும் பாத்திமா ஆகியோர் ஏரல் சிவன் கோயில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளிவந்த நிலையில் இருந்துள்ளது. இருவரும் அந்த பணத்தை எடுத்து கொண்டு வெளியே வந்து யாரும் உள்ளனரான என்று தேடி பார்த்தனர்.
யாரும் இல்லாததால் அந்த பணத்தை எடுத்து கொண்டு உடனடியாக ஏரல் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்திடம் ஒப்படைத்தனர். பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் படி கேட்டு கொண்டனர். அவர்களது நேர்மையை இன்ஸ்பெக்டர் தேவ் ஆனந்த், எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் பாராட்டினர்.