எடப்பாடி + ஒட்டுமொத்த அதிமுகவும் 22-ந் தேதி நம்ம கையில்.. அபார நம்பிக்கையில் ஓபி.எஸ்.!
இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் எனவும் வரும் 22-ந் தேதி ஒட்டுமொத்த அதிமுகவும் தங்கள் வசமாகும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் வரும் 22-ந் தேதியன்று தங்களுக்கே சாதகமான தீர்ப்பு வரும்; அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஒட்டுமொத்தமாக அதிமுகவினரும் நம் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது ஓபிஎஸ் அணி.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற வழக்கில் வரும் 22-ந் தேதியன்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களின் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு படையெடுத்தது.
இதற்கு போட்டியாக அதிமுக நிர்வாகிகள் கையெழுத்துகளுடன் சசிகலா தரப்பும் டெல்லி தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளது. இதனடிப்படையில் இரு தரப்பும் 22-ந் தேதியன்று நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணி நம்பிக்கை
ஜெயலலிதா மறைந்தது தொடக்கம் முதல் ஓபிஎஸ் அணிக்கு மத்திய அரசு பக்க பலமாக இருந்து வருகிறது. இதனால் இரட்டை இலை சின்ன விவகாரத்திலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துவிடும் என்பது ஓபிஎஸ் அணியின் நம்பிக்கை.

கை கொடுக்கும் விதிகள்...
அதேபோல் அதிமுகவின் கட்சி விதிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கிறது; குறிப்பாக பொதுச்செயலர் தேர்வு என்பது அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்; பொதுச்செயலர் இல்லாத நிலையில் முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்டோரே கட்சியை வழிநடத்த முடியும் என்கிற விதிகளால் சசிகலாவின் நியமனமும் கேள்விக்குள்ளாகும் இரட்டை இலை சின்னமும் தங்களுக்கே வந்துவிடும் என கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறது ஓபிஎஸ் அணி.

கொண்டாட்டங்களுக்கு ரெடியாகுங்க
இது தொடர்பாக தமது ஆதரவாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், வரும் 22-ந் தேதி நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்புதான் வரப்போகிறது.கொண்டாட்டங்களுக்கு ரெடியாகிவிடுங்க..

அதிமுக தலைமை அலுவலகத்தில்..
அதுவும் அதிமுக தலைமையகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட இருக்கிறோம். அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஒட்டுமொத்த அதிமுகவினர் நம் வசம் வந்துவிடுவர். அதற்குப் பின்னர் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் ஆட்டங்கள் முடிவுக்கு வரும் என உற்சாக நம்பிக்கையோடு கூறினாராம்.












Click it and Unblock the Notifications