தென்காசிக்கு நாமக்கலிலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்வதா?.. காங். போர்க்கொடி
தென்காசி: தென்காசி தனி தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த ஒருவரையும் வேட்பாளராக அறிவிக்காமல் நாமக்கல்லைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர் இளைஞர் காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2 நாட்களுக்குள் வேட்பாளரை மாற்றாவிட்டால் அமைதி வழியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அருணாச்சலத்தின் மகனுக்கே கட்சி மேலிடம் சீட் மறுத்துள்ளதாலும் அவர்கள் கோபமடைந்துள்ளனர்.
காங்கிரஸின் கோட்டை
தென்காசி தொகுதியானது ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த தொகுதியாகும்.
அதிமுக, சிபிஐ வசம் தலா ஒருமுறை
இந்தத் தொகுதியில் அதிமுக, சிபிஐ ஆகியவை தலா ஒருமுறை வென்றுள்ளன. திமுக கூட்டணியில் நின்ற அப்பாதுரை ஒரு முறை வென்றார்.
அருணாச்சலத்தின் கோட்டை
மேலும் இந்தத் தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம் தொடர்ந்து 6 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர். அவரது சொந்த செல்வாக்கும் அவருக்குக் கை கொடுத்தது.
மகனுக்கே சீட் இல்லை
இந்த நிலையில் தென்காசி தொகுதியில் போட்டியிட அருணாச்சலத்தின் மகன் மோகன் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அதை கட்சி மேலிடம் நிராகரிதது விட்டதால் அருணாச்சலத்தின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
36 பேர் விருப்ப மனு.. அத்தனையும் நிராகரிப்பு
இந்தத் தொகுதியில் சீட் கேட்டு மொத்தம் 36 பேர் மனு கொடுத்திருந்தனராம். ஆனால் எதையுமே கட்சி மேலிடம் ஏற்கவில்லையாம். அத்தனையையும் நிராகரித்து விட்டது.
நாமக்கல் ஜெயக்குமார்
மாறாக நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மாஜி சட்டசபை உறுப்பினரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
பொங்கி எழுந்த இளைஞர் காங்கிரஸார்
கட்சி மேலிடத்தின் இந்த முடிவுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராம் மோகன், தென்காசி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாக்கியராஜ், கடையநல்லூர் சட்டசபைத் தொகுதி செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று தென்காசி பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்து பேட்டி கொடுத்தனர்.
தேவேந்திர குலத்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
தற்போது நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவரை இறக்குமதி செய்துள்ளனர். இது தவறானதாகும். இதன் மூலம் இங்கு பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குர வேளாளர் சமூகத்தை அவமதித்துள்ளனர், புறக்கணித்துள்ளனர்.
2 நாளைக்குள்
2 நாளைக்குள் உள்ளூரைச் சேர்ந்த வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறினர்.