தைப்பூசம்: முருகன் ஆலயங்களில் காவடி சுமந்து வந்து பக்தர்கள் வழிபாடு - தேரோட்டம் கோலாகலம்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆலயத்தில்தைப்பூச தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது.
சென்னை: தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பழனி தைப்பூசம்
முருக பெருமானின் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தர்கள் காவடி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர்.
தேரோட்டம் கோலகலம்
முக்கிய நிகழ்வான தைப்பூச தினமான இன்று மாலை 6.30 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழாவில் 10ஆம் நாளான 12ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூரில் பக்தர்கள்
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தங்கமயில் வாகனம்
உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்
ஸ்ரீரங்கம் தேரோட்டம்
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தை திருவிழா ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள், தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உத்தர வீதிகளில் வலம் வந்தார். தை தேரோட்டத்தை முன்னிட்டுஅலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.