காவிரிக்காக ராஜினாமா செய்யத் தயார்... ஆனால் என்ன பயன்.. கேட்கிறார் தம்பித்துரை!
எதிர்கட்சியினர் சொல்வது போல எம்பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்வதால் எந்த பயனும் இல்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் இன்று தம்பித்துரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர், எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்யச் சொல்வதா? . எம்பி பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் ஏதாவது பலன் கிடைக்கும் என்றால் நாங்கள் ராஜினாமா செய்கிறோம்.
மக்கள் எங்களை பணி செய்வதற்காகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 5 ஆண்டுகள் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம் என்றும் தம்பித்துரை தெரிவித்தார்.
திமுகவினர் மத்திய அமைச்சரவையில் இருந்த போது தமிழகத்திற்கு சாதகமாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் தம்பித்துரை குற்றம் சாட்டினார். காவிரி பிரச்சினையில் நீதி கிடைக்கும்வரை வரை நாடாளுமன்றத்தை நடக்கவிட மாட்டோம் என்று தம்பித்துரை கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மையை வாரியம் உடனே அமைக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த ஒரு வார காலமாக தமிழக எம்பிக்கள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமையன்று திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது இரு கட்சி எம்பிக்களும் தனி தனியாக போராடினர்.