கனிமொழி முதலில் ராஜினாமா செய்யட்டும்: ஸ்டாலினுக்கு தம்பிதுரை பதிலடி
டெல்லி: காவிரி பிரச்சனையில் தங்களை ராஜினாமா செய்ய சொல்லும் திமுக பொருளாளர் ஸ்டாலின் முதலில் தன் வீட்டில் உள்ளவரை (கனிமொழியை) ராஜினாமா செய்ய சொல்லட்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை பதிலடி கொடுத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திடீரென ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் முதுகில் குத்துகிற மத்திய அரசின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக பொருளாளர் ஸ்டாலினோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் போனால் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் இன்று மனு கொடுத்தனர்.
அப்போது அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் ஸ்டாலின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தம்பிதுரை, முதலில் ஸ்டாலின் தம்முடைய வீட்டில் இருப்பவரை (கனிமொழி) ராஜினாமா செய்ய சொல்லட்டும்.. அதன்பிறகு எங்களை பார்த்து பேசட்டும்...
காவிரி நதிநீரி விவகாரத்தில் 1974-ம் ஆண்டு தமிழகத்தை காட்டி கொடுத்ததே கருணாநிதிதான். ஆகையால் காவிரி பிரச்சனை பற்றி பேச திமுஅக்வுக்கு எந்த ஒரு அருகதையுமே இல்லை என்றார்.