சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் செய்யும் அரசியலுக்கு 84% பேர் வரவேற்பு - தந்திடிவி கருத்துக்கணிப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சசிகலா எதிர்ப்பு நிலை அரசியல் வரவேற்கத்தக்கது என்று 84% பேர் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை பிப்ரவரி 5ஆம் தேதி ராஜினாமா செய்த பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதியில் இருந்து சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். இந்த எதிர்ப்பு நிலைக்கு 84% பேர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்த ஒ.பன்னீர் செல்வமும், மதுசூதனனும் இப்போது எதிராக செயல்பட்டு வருகின்றனர். தனி அணியாக செயல்பட்டு ஆர். கே நகரில் சசிகலாவின் அணி வேட்பாளர் டிடிவி தினகரனை எதிர்த்து மதுசூதனனை நிறுத்தியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
இது தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு
தந்தி டிவியின் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும், ஓபிஎஸ்சின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு மக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான பதில்களையே கூறியுள்ளனர்.
வரவேற்பு
சசிகலாவிற்கு பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று 84% பேர் கருத்து கூறியுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக 7 % பேரும் கருத்து இல்லை என்று 9% பேரும் கருத்து கூறியுள்ளனர்.
எதிர்பார்க்கவில்லை
சசிகலாவிற்கு பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு எதிர்பார்க்கவில்லை என்று 55 % பேரும் எதிர்பார்த்தது என்று 41% பேரும் கருத்து இல்லை என்று 4% பேரும் பதிவிட்டுள்ளனர்.
கவலைக்குறியது
தமிழகத்தின் அரசியல் நிகழ்வு கவலைக்குறியது என்று 74% பேரும் எதிர்பார்த்தது என்று 22% பேரும் கருத்து இல்லை 4% பேரும் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.