"மார்வலஸ்" மங்கள்யான்.. ஒரு டைரிக் குறிப்பு!
சென்னை: மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில் இது ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்படிப்பட்ட புதன்கிழமையன்று செவ்வாயின் சுற்றுப் பாதைக்குள் இந்தியா பிரவேசித்திருப்பது சூப்பரானது...!
கடந்த 10 மாத பயணத்தின் வெற்றிக் கனியை இந்திய மக்கள் மகிழ்ச்சியுடன் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மங்கள்யான் கடந்து வந்த பாதையிலிருந்து சில துளிகளைத் திரும்பப் பார்ப்போம்.....
2013 நவம்பர் 5
2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிரு்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மங்கள்யான் எனப்படும் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்ணில் செலுத்தப்பட்டது.
2010ல் உதித்த திட்டம்
மங்கள்யான் திட்டம் 2010ம் ஆண்டில்தான் முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.
சந்திரயானைத் தொடர்ந்து
2008ம் ஆண்டு சந்திரயான் 1 திட்டம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் மங்கள்யான் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், பணிகள் அதி வேகமாக தொடங்கின.
அக்டோபரிலிருந்து நவம்பருக்குத் தள்ளிவைப்பு
முதலில் மங்கள்யானை விண்ணில் செலுத்தும் திட்டம் 2013ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியாகத்தான் இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக நவம்பர் 5ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
தூரமும் கணக்கிடப்பட்டது
மேலும் இன்னொரு முக்கிய அம்சமும் கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது பூமியும், செவ்வாயும் வேறு வேறு கிரகங்கள். இவற்றின் சுழற்சியும் கூட வித்தியாசப்படும். பூமியிலிருந்து செவ்வாயானது இரண்டு விதமான தூரத்தில் இருக்கும். அதாவது குறைந்தபட்ச தூரமாக 5 கோடி கிலோமீ்ட்டரும், அதிகபட்சம் 40 கோடி கிலோமீட்டருமாக இருக்கும்.
குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் இருக்கும்போது
கடந்த ஆண்டுதான் குறைந்தபட்ச தூரமான 5 கோடி கிலோமீட்டர் என்ற தொலைவில் செவ்வாய் இருந்தது. இதனால்தான் கடந்த ஆண்டு மங்கள்யான் ஏவப்பட்டது. ஆனால் தற்போது அது 40 கோடி தூரத்தில் உள்ளது. மீண்டும் அது குறைந்தபட்ச தூரத்திற்கு வருவது 2016 மற்றும் 2018ல் தான் நடக்கும். இதையும் கணக்கில் கொண்டே மங்கள்யான் ஏவப்பட்டது.
உலகின் மலிவு விலை விண்கலம்
உலகிலேயே செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் குறைந்த செலவு விண்கலம் மங்கள்யான்தான்.
ரூ. 450 கோடி மட்டுமே
இந்த விண்கலத்தை ரூ. 450 கோடியில் 2 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
ஆச்சரியத்தில் உலக நாடுகள்
இந்தியாவின் இந்த சாதனை விண்கலத்தைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயுள்ளன.
நானோ கார் சைஸில்
மங்கள்யான் விண்கலமானது, நம்முடைய டாடா நானோ காரின் அளவில்தான் உள்ளது.
15 மாத உழைப்பு
இந்த விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் 15 மாத உழைப்பில் உருவாக்கி விண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.
300 நாள் பயணம்
பூமியிலிருந்து கிளம்பிய மங்கள்யான் விண்கலமானது கிட்டத்தட்ட 300 நாட்கள் பயணித்து தற்போது செவ்வாய் கிரக சுற்றுப் பாதையை வந்தடைந்துள்ளது.
5 கோடி கிலோமீ்ட்டர்
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 5 கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு அது நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. இது நான் ஸ்டாப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராவிட்டி படச் செலவை விட குறைவு
கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ஹாலிவுட் படமான கிராவிட்டிக்கு ஆன செலவை விட குறைந்த செலவில் மங்கள்யானை உருவாக்கியது இந்தியர்களின் பெருமையாகும் என்று கூறியிருந்தார்.
செலவு குறைவுதான்.. ஆனால் சமரசமில்லை
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், செலவு குறைவுதான் என்றாலும் கூட நாங்கள் முக்கிய அம்சங்களில் சமரசம்செய்து கொள்ளவி்ல்லை. அனைத்து வசதிகளுடன் கூடிய அதி நவீன விண்கலமாக இதை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.
வேலை நாட்கள் - 6 மாதம் 10 நாட்கள்!
மங்கள்யான் விண்கலமானது செவ்வாயின் சுற்றுப் பாதையில் 6 மாதம் 10 நாட்களுக்கு செயல்படும். அந்த காலகட்டத்தில் அது கிட்டத்தட்ட 60 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும். நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும்.
2017 -20ல் மேலும் ஒரு விண்கலம்
2017-2020 காலகட்டத்திற்குள் மேலும் ஒரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அப்போது இப்போது உள்ளதை விட மிக நவீனமான, விண்கலமாக அது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான் திட்டத்தில் ஈடுபட்டிருந்தவரான தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இந்த மங்கள்யான் திட்டத்திலும் திட்ட இயக்குநராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கான்செப்ட் டிசைனராக இருந்தவர் ஆதிமூர்த்தி ஆவார்.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பம்
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் கூடியதாக மங்கள்யான் உருவாகியிருப்பது இந்தியர்களுக்கு 100 சதவீத பெருமை தரக் கூடியதாகும்.