ஜெ. இல்லாத அதிமுகவையே வெல்ல முடியவில்லையே.. தினகரன் தலைமையேற்றால் திமுக நிலை?
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுகவைவிட திமுக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், ஆரம்பம் முதலே சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
தொடக்கம் முதலே அதிமுக 2வது இடத்தில் உள்ளது. அக்கட்சியின் மதுசூதனன் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் மருதுகணேஷ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சில காரணங்கள்
திமுக வேட்பாளர் பின்னால் போனதற்கு காரணம், திமுகவின் ஒரு பகுதியினரே அவருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறுகிறார்கள். தினகரன் வெற்றி பெற வேண்டும் என்றும் அதிமுகவின் எடப்பாடி-ஓபிஎஸ் அணியை எதிர்கொள்வதைவிட தினகரனை எதிர்கொள்வது ஓகே என திமுக கருதுவதாக கூறுகிறார்கள்.
திமுக விளக்கம்
திமுக தோல்வியடையும் சூழல் ஏற்பட்டதால், இது ஒருவேளை சமாளிப்பாக கூட இருக்கலாம். இதுகுறித்து டிகேஎஸ் இளங்கோவன் டிவி சேனல் ஒன்றில் கூறுகையில், திமுக எப்போதுமே தோற்க வேண்டும் என போட்டியிடுவதில்லை. தோல்வியடைந்தால் அது ஏன் என்று ஆய்வு நடத்துவோம் என்று தெளிவுபடுத்தினார்.
|
3வது இடம் திமுகவுக்கு
எனவே, தினகரனிடம் மட்டுமல்லாது, ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது திமுக. எனவே மூன்றாவது இடத்திற்குத்தான் செல்கிறது திமுக. காரணம், கட்சியில் புதிய உறுப்பினர்கள் எழுச்சியோடு இணைவது இல்லை என்பதையும் மக்கள் சோஷியல் மீடியாவில் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதிமுகவை முந்தியிருக்கலாம்
ஜெயலலிதா போன்ற ஆளுமையை எதிர்த்து அரசியல் செய்த திமுக, இப்போது எடப்பாடி போன்ற திடீர் முதல்வர் தலைமையிலான ஒரு கட்சியை எதிர்த்து வெல்ல முடியாமல் 3வது இடத்திற்கு சென்றுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கண்டிப்பாக இது திமுகவுக்கு பெரும் பின்னடைவுதான். அட்லீஸ்ட் 2வது இடத்திற்கு வந்திருந்தாலாவது அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் என கூறியிருக்கலாம்.
வலிமையற்ற அதிமுக
வலிமையற்ற அதிமுகவையே வெல்ல முடியாத சூழலில், ஒருவேளை தினகரன் போன்ற ஆளுமை தலைமையில் அதிமுக அமைந்தால், அப்போது திமுக இன்னும் மோசமான சூழலுக்கு தள்ளப்படுமோ என்ற அச்சம் திமுக தொண்டர்களிடம் உள்ளது. ஏனெனில் அதிமுகவில் எந்த அணி எங்கே இணையும் என்பதை யாராலும் கூற முடியாது. எனவே இதை சரி செய்ய வேண்டியது அக்கட்சி தலைமையின் தலையாய கடமையாக உள்ளது.