ஒரே குற்றவாளி ராம்குமார் தற்கொலை.. சுவாதி கொலை வழக்கின் கடைசி சாப்டரை குளோஸ் செய்தது கோர்ட்!
சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட ராம்குமார் மரணம் அடைந்துவிட்டதால் அந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி (24). அவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அவரது பணியிடத்துக்கு செல்வார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சுவாதியை அவரது தந்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார்.
பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்திலேயே சுவாதியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது தமிழகத்தையே உலுக்கியதோடல்லாமல் அந்த சுவாதி கொல்லப்பட்டதை பார்த்த அனைவரின் நெஞ்சமும் பதைபதைத்தது.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்த சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சுவாதியை கொன்ற குற்றவாளி குறித்து துப்புக் கிடைத்தது.
இதைதொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீஸார் சுற்றி வளைத்தனர். பின்னர் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி சிறையில் இருந்த மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சுவாதியின் கொலை வழக்கானது எழும்பூர் நீதி்மன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது ராம்குமார் மரணம் தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை அடுத்து, குற்றவாளி என கருதப்பட்ட ராம்குமார் தற்போது உயிருடன் இல்லாததால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கின் ஒரே குற்றவாளி ராம்குமார்தான் என போலீசார் கூறியதை ஏற்று வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.