அமைச்சர்களின் பவ்ய பேச்சு.. ஜெயலலிதாவோடு போச்சு!
ஜெயலலிதா இருக்கும் வரை அவரை மாண்புமிகு என்றே அழைத்து வந்த தமிழக அமைச்சர்களின் பவயமான பேச்சை தற்போது காணவில்லை.
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரை மாண்புமிகு, புரட்சித் தலைவி என்ற அடைமொழிகளை கொண்டு மட்டுமே அழைத்து வந்த அமைச்சர்கள், தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை அவரது முழு பெயரை குறிப்பிட்டே அழைத்து வருகின்றனர்.
ஜெயலலிதா என்ற சகாப்தம் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் கட்சி நிர்வாகிகள் அவரது வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியது கிடையாது. அப்படி பேசினால் அதோடு அவர் ஓரங்கட்டப்படுவார். அவரிடம் என்றில்லை வேறு யாரிடம் அதுபோல் பேசினாலும் இந்த கதிதான்.
அதிமுகவில் கோஷ்டிகள் இருந்தாலும் ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு கிடந்தனர். கட்சியினரின் ஒழுக்கம், பவ்யம் ஆகியன அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் காணமுடியாது.
ராணுவ கட்டுகோப்பு + அடிமைத்தனம்
அதிமுகவினரை அந்தளவுக்கு ஒரு மினி ராணுவம் போல் வழிநடத்தி வந்த பெருமை அனைத்தும் ஜெயலலிதாவையே சாரும். எதிர்க்கட்சிகளே பார்த்து வியக்கும் அளவுக்கு அமைச்சர்கள் ஜெயலலிதா் முன்பு நிமிர்ந்து கூட நின்றது கிடைக்காது. அவர் முன்பு செருப்பு அணிவதைக் கூட தவிர்த்து வந்தனர். அந்த அளவுக்கு அடிமைத்தனம் கையோங்கியிருந்தது.
சாஸ்டாங்கமாக...
தனக்கு பதவி அளிக்கும் ஜெயலலிதாவின் காலில் பொது இடம் என்று கூட பார்க்காமல் அமைச்சர்கள், நிர்வாகிகள் சாஸ்டாங்கமாக விழுந்து வந்தனர். ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, அவரது வாகனம் சாலையில் சென்றாலும் இதேதான். சாலையிலேயே அமைச்சர்கள் புரண்டு விழுவர். அட, ஹெலிகாப்டர் பறந்தால் கூட கீழே விழுவார்கள் என்றால் பார்த்துக் கொளளுங்களேன்!
ஜெயலலிதாவின் கடைக்கண்
ஜெயலலிதாவிடம் உள்ள நல்ல குணமே அவருக்கு விசுவாசமாக இருப்பர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பதவி கொடுத்து அழகுபார்ப்பார். பிடிக்காவிட்டால் தூக்கிப் போட்டு விடுவார். ஆகையால் அவரது கடைக்கண் நம் மீது திரும்புமா என்று கட்சி நிர்வாகிகள், சாதாரண தொண்டர்கள் தவம் கிடந்தனர், டிராமாக்கள் பல போட்டனர்.
கை கொடுத்து தூக்கிவிடுவார்
தமக்கும், தமது கட்சிக்கும் உண்மையாக விசுவாசியாக, நம்பிக்கைக்குரியவராக யார் இருந்தாலும் சரி அவர்களை தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பார். ஜெயலலிதாவின் அமைச்சரவையை டீக்கடை நடத்தியவர்கள் முதல் ஏர் உழுபவர் வரை, படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரன் என அனைவரும் அலங்கரித்தனர்.
புதியவர்களுக்கு வாய்ப்பு
ஒவ்வொரு சட்டசபை, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலின்போது, மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதைக் காட்டிலும் புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பளிப்பார். என்னதான் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களின் கூழை கும்பிடுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் ஜெயலலிதாவின் புது முயற்சிகளுக்கு எப்போதுமே சபாஷ் உண்டு.
மாண்புமிகு...
ஜெயலலிதாவை இதுவரை அவரது கட்சியினர் பெயர் கூறி அழைத்ததில்லை. மாண்புமிகு... இதயதெய்வம்...புரட்சித் தலைவி அம்மா அவர்கள்..... இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை தேய்ந்து போன ரெக்கார்டு போல் சொல்லி கொண்டே இருப்பர். அவருக்கு கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைத்ததில்லை.
காணாப் போச்!
ஆனால் தற்போது அது காணாமல் போய் விட்டது. பட்டாசு தொழில் தயாரிப்பில் நீதிமன்றம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறையை நீக்கக் கோரி சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், வாய்க்கு வாய் முதல்வரின் பெயரை முழுமையாக கூறியே பேசினார்.
பவ்ய பேச்சு எங்கே?
ஜெயலலிதாவை மாண்புமிகு, போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்தி அழைத்து வந்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதை வழங்க மறுத்து வருகின்றனர். மொத்தத்தில் அமைச்சர்களின் பவ்ய பேச்சு ஜெயலலிதாவோடு போச்சு.