திமுக- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்பார்கள்: தொல். திருமாவளவன் நம்பிக்கை
சென்னை: திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டாலும் மக்கள் ஏற்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக அணியின் "கூட்டணி தூதராக" விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். அவர் ஏற்கெனவே தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது திமுக அணியில் தேமுதிக இணைய திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார். இதனால் மீண்டும் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகக் கூடும் என தகவல்கள் பரவின.
டெல்லியில் ராகுலை சந்தித்தது பற்றி நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ராகுலுடன் பேசியது என்ன?
நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நிறைவேற்ற வேண்டிய பல மசோதாக்கள் கிடப்பில் கிடக்கின்றன. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினர் நலனை மையப்படுத்தும் பல மசோதாக்கள் அடக்கம். அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே ராகுல்காந்தியை சந்தித்தேன்.
பிரதமர் மன்மோகன்சிங்கையும், சோனியாகாந்தியையும் அடுத்தடுத்து சந்தித்து இதனை வலியுறுத்துவேன். எமது மக்களின் நலன்சார்ந்த மசோதாக்கள் தொடர்பாகவே ராகுலை சந்தித்தேனே தவிர, வேறு அரசியல் காரணங்கள் கிடையாது. ஐம்பது நிமிட சந்திப்பில், 45 நிமிடம் தாழ்த்தப்பட்ட சமூகம் தொடர்பான பல விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் ராகுல். கடைசி 5 நிமிடங்கள்தான் சற்று அரசியல் பேசினோம்.
தமிழகத்தில் காங்கிரஸுக்கு மதிப்பு எப்படி?
"தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படிப் பார்க்கிறார்கள்' என்பது பற்றி கேட்டார் ராகுல். அதற்கு நான், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க தமிழகத்தின் பங்களிப்பு அதிகம். அப்படியிருந்தும் தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராகவே காங்கிரஸ் இருப்பதை தமிழர்கள் கசப்பாகவே உணர்கிறார்கள். குறிப்பாக ஈழப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, மூன்று பேர் தூக்கு விவகாரம் உள்ளிட்ட பல விசயங்களில் தமிழகத்தின் உணர்வுகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.
இடஒதுக்கீடு விவகாரம்
தற்போதுகூட, சமூக ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஜனார்த்தன திரிவேதி கருத்து தெரிவித்திருப்பதை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது' என விவரித்துப் பேசினேன். தவிர, மதச்சார்பற்ற தன்மை குறித்தும் விளக்கினேன். எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்த ராகுல், கட்சித் தலைவரிடம் (சோனியா) பேசுவதாகத் தெரிவித்தார். மறு நாளே இதன் பலன் தெரிந்தது. "ஜனார்த்தன திரிவேதியின் கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம்' என்றும் சோனியா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
திமுகவில் நிறையே பேர் இருக்கிறார்களே..
ராகுலின் சந்திப்பில் இதுதான் நடந்ததே தவிர, தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸை கொண்டுவர நான் தூது போகவில்லை. காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி உறவை தி.மு.க. ஏற்படுத்த நினைத்தால் காங்கிரஸ் தலைமையுடன் பேச தி.மு.க.வில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் நான் முயற்சி எடுப்பதாகச் சொல்வது தவறு.
திமுக-காங், கூட்டணியை ஏற்பார்கள்..
இனி எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப் பாட்டை தி.மு.க. எடுத்தது. பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் கலைஞர். அதனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். காலத்திலேயே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தந்தார்கள். கடுமையான முரண்பாடுகளும் இடைவெளியும் இருக்கும் தற்போதைய சூழலில் இணைந்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
திமுக அணிக்கு பாதகம்
தற்போது தமிழக அரசியலில் 3 அணி என்பது முடிவாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் நான்காவதாக ஒரு அணி உருவானால், வாக்குகள் சிதறும் ஆபத்து உண்டு. அது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக இருக்காது.
தேமுதிக தனித்துப் போட்டியிட்டால்..
தேமுதிக தனித்துப் போட்டியிடுமானால் அந்த அரசியல் அவருக்கும் பயன்படாது. தமிழகத்திற்கும் பயன்படாது. விழலுக்கு இறைத்த நீராகத்தான் மாறிப்போகும். அந்தத் தவறை விஜயகாந்த் செய்யமாட்டார்.