தோல்வியால் துவண்டு விடவில்லை... தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி தொடரும்... திருமாவளவன்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பெற்ற தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். இணைந்தே தேர்தலைச் சந்திப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் நாங்கள் துவண்டு விடவில்லை. இந்த கூட்டணி வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தைரியமாக தேர்தலை சந்திப்போம்.
சட்டசபை தேர்தலின் போது திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவரும். இந்த பணம் யாருடையது? எங்கிருந்து அனுப்பப்பட்டது? பணம் பிடிபட்ட போது ரகசியங்களை காப்பாற்ற யார்-யார் உதவினார்கள் என்பது சி.பி.ஐ. விசாரிக்கும் போதுதான் உண்மை வெளிவரும். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் தண்டனை காலம் முடிந்ததும் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர். இதில் தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை தாயகம் கொண்டு வருவதற்குள் கச்சத்தீவை மீட்பதற்கும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications